யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-10-31




முதல் வாசகம்

உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்கின்ற பிலிப்பி நகர இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள், திருத்தொண்டர்கள் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் பணியாளர்களான பவுலும் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! உங்களை நினைவுகூரும்பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன். நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்கள் எல்லாரையும் பற்றி எனக்கு இத்தகைய எண்ணங்கள் எழுவது முறையே. ஏனெனில் நான் சிறையிலிருக்கும் இந்நேரத்திலும் நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்டிய காலத்திலும் நான் பெற்ற அருளில் உங்களுக்கும் பங்குண்டு. கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.
திருப்பாடல்111: 1-2. 3-4. 5-6

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, ``ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு அவர்களை நோக்கி, ``உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?'' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களை நோக்கி, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில்; விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக்கா 14:5-6)

எதற்கெடுத்தாலும் சட்டத்தை மேற்கோள் காட்டுகின்ற மனிதர்கள் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைச் சில வேளைகளில் மறந்துவிடுகிறார்கள், அல்லது வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள். ஓய்வுநாள் பற்றிய சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிய பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டதை இயேசு பல முறை கடிந்ததுண்டு. ஆடுமாடுகளுக்கு ஆபத்து நேர்ந்தால் அவற்றைக் காக்க வேண்டும் என்னும் சட்டம் பழைய ஏற்பாட்டில் உண்டு. ''உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவி செய்'' (இச 22:4) என்பது இணைச்சட்டம் அளித்த ஒழுங்குமுறை. வேறொருவரது மாடோ கழுதையோ குழியில் விழுந்து இறந்துவிட்டால் அதற்கு எவ்வாறு ஈடுசெய்வது என்பது பற்றியும் சட்டம் இருந்தது (காண்க: விப 21:33-34). இவ்வாறு மனித நலனுக்கு ஆதரவான சட்டங்கள் இருந்த பிறகும் பரிசேயர் இயேசுவிடத்தில் குறைகண்டனர். இயேசு ஆடுமாடு போன்ற விலங்குகளைக் காப்பது தவறு எனக் கூறவில்லை. மாறாக, மனிதருக்கு நன்மை செய்வதற்குக் காலம் நேரம் பார்க்கலாகாது எனவும், எந்த தருணத்திலும் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் எனவும் இயேசு கற்பிக்கிறார். அவருடைய போதனையைக் கேட்ட பரிசேயர் இயேசு கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் ''அமைதியாய் இருந்தனர்'' (லூக் 14:4). அது மட்டுமல்ல, இயேசுவின் கேள்விக்குப் ''பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக் 14:6).

இன்றைய உலகிலும் ஏழை எளியவர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் எதிராக இருக்கின்ற சட்ட திட்டங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மனிதரைப் பார்த்து ''அமைதி காக்கின்ற'' போக்கு நிலவுவதை நாம் பார்க்கலாம். அநீதியான அமைப்புகளை மாற்றியமைத்து மனித வாழ்வை மேம்படுத்துகின்ற அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ''அமைதி காப்போர்'' பலர் உண்டு. ஆடுமாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மனிதருக்கு ஆதரவாக ஏன் செயல்படுவதில்லை என நம்மை நோக்கிக் கேட்கின்ற இயேசுவுக்கு நம்மால் ''பதில் சொல்ல இயலாது'' என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, அன்பு என்னும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாயிருக்க அருள்தாரும்.