பொதுக்காலத்தின் 34ஆம் ஞாயிறு
நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து : அனைத்துலக அரசர் பெருவிழா.
திருவழிப்பாட்டு ஆண்டு A (23-11-2014)
திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே! சகோதர, சகோதிரியரே! திருவழிபாட்டு ஆண்டின் இறுதிவாரத்தில்
நன்றியுணர்வோடு இறைபிரசன்னத்தில் கூடிவந்திருக்கின்றோம்.
இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். அனைவருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்கள்!!
அவருடைய அரசும், செயற்பாடுகளும் இவ்வுலக அரசர்களினதும், அரசுகளினதும் செயற்பாடுகள் போன்றது அல்ல.
அவர் நீதிமான்களையல்ல பாவிகளையே தேடிவந்தவர் –
தீயவர்கள் சாகவேண்டுமென்பது அவருடைய விருப்பமல்ல மாறாக
அவர்கள் மனம்மாறவேண்டுமென்றே விரும்புகின்றவர்.
அவர் ஒரு நல்ல ஆயன். அமைதியும், அன்பும், கரிசனையும், இரக்கமும், பரிவும், பாசமும், நீதியும், உண்மையும், நேர்மையுமுள்ள ஒரு அரசன்.
இந்த விழாவைக் கொண்டாடும் இவ் வேளையில்
உலக அரசுகளுக்காகவும், அரசியல், சமய, குழுக்களின் தலைவர்களுக்காகவும் இறைவனை மன்றாடுவோம்.
இவர்கள் அனைவரும் அழிவுக்கான சிந்தனைகளையும் திட்டங்களையும் களைந்தெறிந்துவிட்டு,
மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கின்ற மனப்பக்குவத்தை அவர்களுக்கு அளித்து,
அவர்களை வழிநடாத்தியருள வேண்டுமென்று அவர்கள் அனைவரையும் இத் திருப்பலியில் ஒப்புக்கொடுத்துச் செபிப்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
தான் படைத்த ஆதாமையும், ஏவாளையும் தேடி வந்த இறைவன், ஆபிரகாமுக்கும்,
ஈசாக்குக்கும், யாக்போபுக்கும், தேடிச்சென்று பொருட்செல்வங்களையும், அருட்
செல்வங்களையும், கொடுத்த இறைவன், அரசர்களுக்கும் இறைவாக்கினர்களுக்கும்
தேடிச்சென்று ஆசீர் அளித்த இறைவன், ஆட்டிக்குட்டிகளை மேய்க்கும் ஆயனாக
உருவெடுத்து அவரின் ஆட்டிக்குட்டிகளாகிய நம்மைத் தேடி வந்து பாதுகாப்பார்
என்பதை எடுத்து கூறும் இன்னறய முதல் வாசகத்தை கவனமுடன் கேட்போம்
என் மந்தையே, நான் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையே நீதி வழங்குவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக உருவெடுத்தார், நமக்கும் உருக் கொடுத்தார்.
கீழ்படிதலைக் கடைப்பிடித்தார், நம்மையும் கடைப்பிடிக்க அழைத்தார். நன்மைகளைச்
செய்தார், நம்மையும் செயல்படத் தூண்டினார். தீமைகளைச் சாடினார், நம்மையும்
விட்டொழியுங்கள் என்றார். உண்மையை உரைத்தார், நம்மையும் பேச அழைத்தார். உறவுகளை
மதித்து உரிமைகளை வளர்த்தார், நம்மையும் வளர்க்கச் செய்தார்.
அவரை முன்னிட்டு அனைத்தையும் செய்யும் நாம், அவரை முன்னிட்டே அவருடன்
உயிரோடு எழுப்பப்படுவோம் என்று புனித பவுல் இன்னறய இரண்டாம் வாசகத்தில்
கவனமுடன் கேட்போம்
கிறிஸ்துவின் வருகையின்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28
சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.
எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார்.
அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
உண்மைக்கு சாட்சியம் பகர்கிற உன்னத அரசர் இயேசு. மற்றவர்வளுக்கு வலிக்குமே என்பதற்காக சுடுகிற உண்மையை மறைப்பவரல்லர் அவர்.
அவரின் அடியொற்றி வாழுகிற மனிதர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் துணிச்சலாய் சான்று பகர்வார்கள்.
தவறுகளை தட்டிக் கேட்பார்கள், சரியானவைகளைத் தட்டிக் கொடுப்பார்கள். அந்த அரசபுனிதம் மற்றவர்களை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
அற்ப இன்பங்களுக்குள் மனிதர்களை அடக்கி வைக்காது.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
நல்லாயனாக எங்களையெல்லாம் வழிநடாத்தி வரும் அன்புத் தந்தையே இறைவா!
திருச்சபையை வழிநடாத்த உம்மால் அர்ச்சிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள எம் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் உம் ஆவியினால் நிரப்பி,
அவர்கள் அனைவரும் நீர் காட்டிய தலைமைத்துவப் பண்புகளை தம்மிலே கொண்டு வாழவும்:
சிறப்பாக உம் மக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய வல்லமையை
அவர்களுக்கு அளித்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!
உடல், உள நோயினால் வேதளையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி:
அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்….
எம் இறைவா , எம் அரசே,
நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக,
ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம்.
நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று,
பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருளைத் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அமைதியான நீர்நிலைகளுக்கு எங்களை அழைத்துச் செல்லும் தந்தையே இறைவா!
இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுகிறோம்.
அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக
விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர்,
தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும்,
இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தூயவரான அன்புத் தந்தையே இறைவா!
இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும்,
உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை
வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீர் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டும் தந்தையே இறைவா!
எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும்.
அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும்,
குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும்,
உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|