யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு

இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலி!

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து 14:18-20, 1கொரிந்தியருக்கு 11: 23-26, லூக்கா 9:11-17



'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்


திருப்பலி முன்னுரை

அன்புக்குரியவர்களே,

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் இருக்கின்ற மறைவான பிரசன்னத்தை திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கிறது. நம் ஆண்டவரின் திருஉடலையும், திருஇரத்தத்தையும் உணவாகவும் பானமாகவும் பெறப் பேறுபெற்றவர்கள் நாம். இறுதி இரவுணவு வேளையில் கிறிஸ்து ஏற்படுத்திய இந்த நற்கருணைப் பலியே, நம் கத்தோலிக்க வழிபாட்டின் மையமாக விளங்குகிறது. நற்கருணை நாதருக்கு உண்மையுள்ள சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் ஆர்வத்துடன் பங்கேற்போம்.



முதல் வாசகம்

அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 14:18-20

அந்நாள்களில், சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, 'விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
திருப்பாடல்: 110: 1-4.

ஆண்டவர் என் தலைவரிடம் நான் உம் பகைவரை உமக்குப் கால்மணை யாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று உரைத்தார். பல்லவி

வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார். உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி

நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர். வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி

மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் உண்டு பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்11: 23-26

சகோதரர் சகோதரிகளே! ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களி டம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! 'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:11-17

அக்காலத்தில், இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங் கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர். இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்கள், 'எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்" என்றார்கள். ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, 'இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்" என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எங்கும் இருப்பவராம் இறைவா,

உலகெங்கும் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள் அனைவரும், கிறிஸ்துவின் மறைபொருளான பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், இறைமக்களை விசுவாச வாழ்வில் வளரச்செய்யவும் அருள்புரிய வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒற்றுமையை அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், நற்கருணைப் பலியின் மேன்மையையும், உண்மைத் தன்மையையும் உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபையில் ஒன்றிணையும் மனம் தரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே இறைவா!

உம்மடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம் இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும், மதிப்பையும் உணர்ந்து வாழவும் இறைவார்த்தையாலும், நற்கருணையாலும் ஊட்டம் பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பகிந்துவாழ அழைப்பவராம் இறைவா,

உலகில் பல்வேறு தேவைகளாலும், துன்பங்களாலும் நொந்து வருந்தும் மனிதர் களோடு, உமது அன்பையும் இரக்கத்தையும் உதவியையும் பகிரும் கருவிகளாக வாழ, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. தந்தையே இறைவா!

உம் திருமகனின் உடலையும், இரத்தத்தையும் எங்களுக்கு உணவாக அளித்த உமக்கு நாங்கள் நன்றியறிந்திருக்க அருள்தாரும். எமது இளைஞர்கள் அனைவரும் நற்கருணை குறித்துக் காட்டும் தூய்மையான வாழ்வை வாழ்ந்து தாம் வாழுகின்ற சூழலில் என்றும் ஒளியாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார்" (மத்தேயு 14:16)

இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் திரளாக வந்திருக்கிறது. தம்மைத் தேடி வந்த மக்களுக்கு உணவு தேவை என்பதை உணர்கின்றார் இயேசு. மக்கள் ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கவும் வசதி இல்லை. அப்போதுதான் இயேசு தம் சீடரை நோக்கி, மக்கள் புறப்பட்டுச் சென்று உணவு வாங்கிடத் தேவையில்லை என்று கூறுகிறார். மாறாக, அவர் தம் சீடருக்கு ஒரு கட்டளை தருகிறார்: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இயேசு அப்பங்களையும் மீனையும் பலுகச் செய்த பிறகும் தாமாகவே சென்று மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்துகொடுக்கவில்லை. மாறாக, அவர் தம் சீடர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவர்களும் மக்கள் நடுவே சென்று அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். சீடர்கள் யார்? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள் சீடர்களாக அழைக்கப்பட்டனர். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? மக்களது புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; மக்களது ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு மக்கள் தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். மக்களுடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் உடலையும் இரத்தத்தையும் எங்களுக்கு உணவாக அளித்த உமக்கு நாங்கள் நன்றியறிந்திருக்க அருள்தாரும்.