யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2016-12-11

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6,10 ,திருப்பாடல்146: 7. 8. 9-10,திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10 , மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11)




வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?


திருப்பலி முன்னுரை

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்று அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய அருள்வாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

காலம் காலமாக மெசியாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் அடுத்தடுத்து வந்த இறைச் செய்திகளைக் கேட்டு நடந்ததின் வழியாகவும் நடைபெற்ற சிறப்புச் செயல்பாடுகளில் பங்கேற்றதன் வழியாகவும் இறைத் திட்டத்துக்குள் இணைந்தார்கள். நாமும் இன்று சிறப்பாக நமக்கு வழங்கப்படும் மகிழ்வு தரும் இறைச் செய்திகளைக் கேட்டு அதன்படி நடந்து இறையரசின் மக்கள் எனும் உயர் நிலையை நமதாக்குவோம். வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-6,10

அந்நாள்களில் பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப் படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப் படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்
திருப்பாடல்146: 7. 8. 9-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பல்லவி

9 ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பல்லவி

இரண்டாம் வாசகம்

உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-10

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடு இருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது. சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 2-11

அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்'' என்றார். அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரைவிட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். `இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1.அன்பின் இறைவா

திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாது, துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை மாதிரிகளாகக் கொண்டு. வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, ;திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: என்ற தந்தையே!

எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மகிழ்ச்சி தருபவராம் இறைவா,

பலியிலே பங்கேற்கும் நாங்கள் மகிழ்ச்சியை எங்களது ஆடையாக கொண்டு, அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு மனஇறுக்கங்களில் இருந்து நாங்களும், மற்றவர்களை விடுவிக்கின்ற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. தோழமையின் நாயகனே எம் இறைவா!

வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்று பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நல்லதையே எமக்கு அருள்கின்ற தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் நீர் காணும் வகையில் எம்மை மாற்றியமைத்துக் கொள்ளவும், சகோதர உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும் வேண்டிய அருளாற்றலை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

பல்வேறு காரணங்களால் இன்றைய இத் திருப்பலியில் பங்குகொள்ள முடியாதிருப்போர், நோயுற்றிருப்போர், வேதனைகளுக்குள் வாழ்வோர், சிறையிலிருப்போர், பணயக் கைதிகளாயிருப்போர் அனைவரும் நீர் கொடுக்கும் மகிழ்ச்சியைப் பெற்று மகிழ அருள் கூர்ந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை'' (மத்தேயு 11:11)

இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர் திருமுழுக்கு யோவான். அவரே இயேசுவுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்கு வழங்கினார். யோவானின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடையே பரவியது என்றால் சிலர் அவரை மெசியா என்றுகூடக் கருதினார்கள். ஆனால், யோவானோ இயேசுவின் முன் தலைபணிந்தார். இயேசுதான் உண்மையிலேயே வரவிருக்கின்ற மெசியா என்பதை யோவான் மக்களுக்கு எடுத்துக் கூறினார். இயேசுவோடு ஒப்பிடும்போது, தம்மை ஒரு முன்னோடியாகத்தான் அவர் கருதினார். ஆக, யோவான் இயேசுவின் வருகையை அறிவித்தாரே ஒழிய தாமே மெசியா எனப் பறைசாற்றவில்லை. இங்கு நாம் யோவானின் பணிவைப் பார்க்கின்றோம். முற்கால இறைவாக்கினரைப் போல யோவானும் மக்களுக்கு அழிவு பற்றிய செய்தியை அறிவித்தார். மக்கள் மனம் மாற வேண்டும் என்று கேட்டார். யோவான் கடவுளின் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகித்தார் என்பதை இயேசுவின் சொற்களிலிருந்து நாம் அறிகிறோம். ''மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை'' (மத் 11:11) என்று இயேசு கூறிய சொற்கள் யோவானுக்கு இயேசு வழங்கிய புகழாரம் மட்டுமல்ல, யோவான் அறிவித்த செய்தியை இயேசு முழுமையாக ஏற்றார் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

யோவான் மிகப் பெரிய மனிதர் என்பது உண்மையே. என்றாலும், கடவுளாட்சியில் நுழையும் வாய்ப்புப் பெற்றோர் யோவானைவிடவும் பேறுபெற்றவர்கள் என இயேசு கூறியது நமக்கும் பொருந்தும். இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோர் அவரோடு என்றென்றும் மாட்சிமை பெறுவர் என்னும் உறுதிப்பாடு நமக்குத் தரப்பட்டுள்ளது. எனவே, கடவுளாட்சியில் நாம் பங்குபெற்று, நம் வாழ்க்கைக் குறிக்கோளை அடைந்தால் அது கடவுள் நமக்குத் தருகின்ற அருளே. இத்தகைய அருள் பெற்றோர் யோவானைவிடவும் உயர்ந்த நிலையைப் பெறுகின்றனர் என்பது நமக்கு உற்சாகம் ஊட்டுகின்ற செய்தி.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்கள் உள்ளத்தில் வந்து எங்களோடு வாழ்கின்றீர் என உணர்ந்திட அருள்தாரும்.