யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-09-29

தூய மிக்கேல் கரிரியேல் ரபேல் - அதிதூதர்கள் விழா




முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
திருப்பாடல்138: 1-5

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்'' (யோவான் 1:51)

கடவுள் படைத்த படைப்புகளில் எல்லாம் உயர்ந்த படைப்பு மனிதரே என்று கூறி நாம் பெருமைப்படுகிறோம். ஆயினும் விவிலியம் தரும் செய்திப்படி, கடவுள் ''வானதூதர்களை''யும் படைத்தார். இவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுவர்; கடவுளின் தூதர்களாகச் செயல்படுவர். குறிப்பாக, மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய தூதர்களைத் திருச்சபை இன்று நினைவுகூர்கிறது. மிக்கேல் தீய சக்திகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார் (காண்க: திவெ 12:7-12). கபிரியேல் மரியாவை அணுகி, கடவுள் மனிதராக உலகில் பிறப்பார் என்னும் செய்தியை அறிவிக்கிறார் (காண்க: லூக் 1:26-38); இரபேல் (தோபி 12:14-15) நலமளிப்பவராக வருகிறார். கடவுளின் படைப்பு மனிதரின் கண்களுக்குத் தெரிகின்றவை மட்டுமல்ல, நம் புலன்களுக்கு எட்டாதவையும் அவருடைய படைப்பாக உள்ளன என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வானதூதர்களும் கடவுளைச் சார்ந்தே உள்ளனர் என்பதையும் திருச்சபை கற்பிக்கிறது. கடவுளின் விருப்பத்தைச் செயல்படுத்துவதே வானதூதர்களின் பணி. அதுபோலவே, மனிதரும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள்.

வானதூதர்கள் என்னும் உருவகம் வழியாக இன்னொரு உண்மை வலியுறுத்தப்படுகிறது. அதாவது, அவர்கள் கடவுளின் இல்லத்தில் அவருக்குப் புகழ்செலுத்துவதுபோல இயேசுவின் வாழ்விலும் கடவுளின் செயல் துலங்குகிறது. இயேசு கடவுளோடு இணைந்தவர் என்றும் கடவுளுக்கு நிகரான மாட்சி உடையவர் என்று கூறுவதும் ''கடவுளின் தூதர் மானிடமகன்மீது ஏறவும் இறங்கவும் செய்வர்'' என்று கூறுவதும் ஒரே பொருளில்தான். மிக்கேலைப் போல தீமையை எதிர்த்துப் போராட நாம் துணிய வேண்டும். கபிரியேலைப் போல மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பவர்களாக நாம் மாற வேண்டும். இரபேலைப் போல மக்களுக்கு நலம் கொணர்பவர்களாக நாம் திகழ வேண்டும். ஏனென்றால் மனிதரைக் கடவுள் தமக்கும் வானதூதர்க்கும் சற்றே சிறியவராக ஆக்கியுள்ளார் (காண்க: திபா 8:5).

மன்றாட்டு:

இறைவா, உம் திருப்புகழை என்றென்றும்; பாடுகின்ற வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.