திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்

வியாழன் பிப்ரவரி, 23.02.2012


முதல் வாசகம்


இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா 40: 4ய)

பல்லவி: ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி 3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி 4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 17
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்'' (மத்தேயு 16:25)
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்'' (மத்தேயு 16:25)

இயேசுவின் அன்புக்குரியவரே!
-- மனித உயிர் கடவுளிடமிருந்து வருகின்ற கொடை. அதை நாமாகவே விரும்பிப் பெற்றதுமில்லை, நம் விருப்பப்படி நம் உயிரை நீட்டவோ குறுக்கவோ நமக்கு உரிமையுமில்லை. ஆனால் கடவுள் நமக்குத் தருகின்ற கொடையாகிய உயிரை நாம் பாதுகாத்துப் பேணி, பொறுப்போடு நடந்துகொள்கின்ற கடமை நமக்கு உண்டு. நம் உயிரைப் பாதுகாக்கும் எண்ணம் நம்மில் இயல்பாகவே உளது. ஆனால், நம் உயிர் நம் கையில் உள்ளது என்னும் தவறான எண்ணத்தில் நம் விருப்பம்போல நடக்கத் தொடங்கிவிட்டால் நாம் பொறுப்போடு செயல்படுகிறோம் என்று கூற முடியாது. இயேசு இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறார். -- மனிதர் தம் வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளை ஒருநாளும் மறந்துவிடலாகாது. அக்குறிக்கோள் நாம் கடவுளோடு நிலையான வாழ்வில் இணைந்து பேரின்பக் கடலில் மூழ்கிட வேண்டும் என்பதே. இதை மறக்கின்ற வேளைகளில் இவ்வுலகத்தை மட்டுமே ஒரு பொருட்டாக எண்ணுகின்ற மன நிலை நம்மில் வளர்ந்து, இவ்வுலகு சார்ந்த உயிரை எப்படியாவது தக்க வைத்துக்கொள்வோம் என நாம் தவறாகக் கருதுகின்ற ஆபத்து எழுந்துவிடும். இதற்கு மாறாக, இயேசு வாக்களிக்கின்ற வாழ்வை நாம் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அந்த நிலையான வாழ்வை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் மனமுவந்து மேற்கொள்வோம். இயேசு நமக்கு விடுக்கின்ற சவாலையும் நாம் துணிந்து ஏற்க முன்வருவோம். ஆக, உண்மையான வாழ்வு நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் கடவுளின் ஆட்சியில் பங்கேற்றிட நாம் அவரிடம் நம்மையே கையளிப்போம். அப்போது இவ்வுலகு சார்ந்த உயிரை இறுதியானதாகக் கருதாமல், நம் வாழ்நாள்களை நன்முறையில் செலவிட்டு எந்நாளும் நிலைத்துநிற்கின்ற உண்மையான வாழ்வைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்று மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பறித்திட இயலாது.

மன்றாட்டு:
இறைவா, நிலைவாழ்வைப் பெறுவதற்கு எங்கள் உயிரையும் பலியாக்க எங்களுக்கு அருள்தாரும்.