தவக்காலம் இரண்டாம் வாரம்

திங்கள் மார்ச், 05.03.2012


முதல் வாசகம்


நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11ய

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம். ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 79: 8. 9. 11. 13

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி 11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)

இயேசுவின் அன்புக்குரியவரே!
இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருகின்ற இக்கூற்றினைப் ''பொன்விதி'' எனவும் கூறுவர். சிலர் தாராளமாக அளந்துகொடுக்கத் தயக்கம் காட்டுவர். பெருமளவில் பிறருக்குக் கொடுத்துவிட்டால் தமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நாம் தாராள உள்ளத்தோடு கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோருகிறார் இயேசு. நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும். கடவுளிடமிருந்து இரக்கம் பெற்றோர் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தவறமாட்டார்கள். ஆனால், கடவுளின் இரக்கத்தை உண்மையாகவே அனுபவத்து, நன்றியோடு ஏற்காதோர் இரக்கத்தின் உள்பொருளையே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தயங்குவார்கள்.

மன்றாட்டு:
இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.