தவக்காலம் நான்காம் வாரம்

வெள்ளி மார்ச், 23.03.2012


முதல் வாசகம்


இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1ய,12-22

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக்கொண்டார்கள்: `நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்; நம் செயல்களை எதிர்க்கிறார்கள்; திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்; நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள். கடவுளைப் பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்; ஆண்டவரின் பிள்iளைகள் எனத் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது; அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது; அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்; தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்; நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்; கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள். அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்; முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்; பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்; ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.' இறைப்பற்று இல்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச் சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறிய வில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 34: 16-17. 18-19. 20, 22 (பல்லவி: 18ய)

பல்லவி: உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்.

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகின்றேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1, 2, 10, 25-30

`மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.' (மத் 4: 4b)

அக்காலத்தில் இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழி தேடிக்கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை. யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார். எருசலேம் நகரத்தவர் சிலர், ``இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்? இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்து கொண்டார்களோ? ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே'' என்று பேசிக்கொண்டனர். ஆகவே கோவிலில் கற்பித்துக் கெண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், ``நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசு, 'என்னை அனுப்பியவர் உண்மையானவர்...நான் அவரிடமிருந்து வருகிறேன்' என்றார்'' (யோவான் 7:28-29)
-இயேசுவை நாம் புரிந்துகொள்வதற்கு நான்கு நற்செய்தியாளர்கள் பல தகவல்களைத் தருகின்றனர். குறிப்பாக யோவான் நற்செய்தியாளர் இயேசு தம்மைப் பற்றி யூதர்களுக்கு விளக்கிக் கூறியதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தங்களை எல்லாவித அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவிடுத்து, தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி நீதியோடு ஆட்சிபுரிவதற்கு ஒரு மெசியா வருவார் என்னும் எதிர்பார்ப்பு யூதர்கள் நடுவே மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. அதிகாரத்தோடும் படைபலத்தோடும் மெசியா வருவார் என்றும், அவரே உரோமையரின் ஆட்சியை முறியடிப்பார் என்றும் மக்கள்நடுவே எதிர்பார்ப்பு இருந்தது. இப்பின்னணியில் இயேசு தாம் கடவுளிடமிருந்து வருவதாக அறிவிக்கின்றார். இதை ஏற்க மறுக்கின்றனர் பல யூதர்கள். எனவே, இயேசு அவர்களைப் பார்த்து, ''நான் கடவுளிடமிருந்து வருகிறேன்'' என்று கூறியதோடு அதே கடவுளின் வல்லமையோடு தாம் அரும்செயல்கள் ஆற்றுவதாகவும் உரைக்கின்றார். -இயேசு உண்மையிலேயே கடவுள்தானா என்னும் கேள்வி அன்று எழுந்ததுபோல இன்றும் எழுகின்றது. கிறிஸ்தவ நம்பிக்கைப்படி, இயேசு கடவுளிடமிருந்து வருகிறவர்; ஏன், இயேசு கடவுளின் ''மகன்''. ஆகவே, இயேசு தம்மைக் கடவுளுக்கு ஒப்பிட்டுப் பேசியபோதும் தாம் கடவுளால் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். இதைப் புரிந்துகொள்ள பல யூதர் தயக்கம் காட்டினார்கள். ஏனென்றால் அவர்களது சமய நம்பிக்கைப்படி எந்த மனிதரும் தம்மைக் கடவுளுக்கு நிகராகக் கருதமுடியாது. ஆனால் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவோ தம்மைக் கடவுளுக்கு நிகரானவராகக் காட்டினார். எனவே பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இன்றைய உலகில் வாழ்கின்ற நாம் இயேசுவின் வரலாற்றை அறிந்து, அவருடைய சொற்களை ஏற்று, அவர்மீது நம்பிக்கை கொள்வதற்கு முன்வருகிறோம். ஆனால் இந்நம்பிக்கை நம்மில் இயல்பாகத் தோன்றுகின்ற மனநிலை அல்ல. நம்பிக்கை என்பது கடவுள் நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. அதை நன்றியோடு ஏற்பது நம் பொறுப்பு.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியருளும்.