புனித வாரம்

திங்கள் ஏப்ரல், 02.04.2012


முதல் வாசகம்


அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7

முதல் வாசகம் ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 27: 1. 2. 3. 13-14 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். பல்லவி

3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-11

மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, ``இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, ``மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை'' என்றார். இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




இன்று இயேசு தன் முழு ஆளுமையிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தார், இறந்தார் என்னும் நமது சிந்தனையின் இரண்டாவது நாளாக இன்று இந்தக் கருத்தை சிந்திப்போம்:
இயேசு தன் மனதை ஒப்புக்கொடுத்தார்: மனித ஆளுமையின் இரண்டாவது பரிமாணம் மனம், சிந்திக்கும் ஆற்றல். மாந்தரின் மனம் இறைவனையே எப்போதும் நினைக்க வேண்டும். “நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன். இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்” (திபா 63:6) என்றார் திருப்பாடலாசிரியர். இயேசு எப்போதும் தந்தை இறைவனை மாட்சிப்படுத்துவது பற்றியே சிந்தித்தார். “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு” (யோவா 4:34) என்றார். அவரது மனம் இறைவனையே எப்போதும் நாடியது. வேறு சிந்தனைகள் அவரிடம் இல்லை. பணம், பொருள், உணவு, ஓய்வு என எதுபற்றியும் இயேசு கவலைப்படவில்லை. மனம் செயல்படும் விதம் பற்றிய ஓர் எடுத்துக்காட்டைப் பவுலடியார் நன்றாகச் சொல்கிறார்: “மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார். எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்” (1 கொரி 7:33). ஆனால், “மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார். எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்” (1 கொரி 7:32). இயேசு அப்படித்தான் வாழ்ந்தார், தந்தை இறைவனுக்கு உகந்தவற்றை எப்படிச் செய்யலாம் என்றே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தார். அவரது இறப்பின் வேளையிலும் தந்தை இறைவனையே அவரது உள்ளம் நாடியது. எனவே, தந்தை இறைவனை நோக்கி மன்றாடினார் (யோவா 17 அதிகாரம் முழுவதும்). சிலுவையில் தொங்கும்போதும் அவரது சிந்தனை தந்தை இறைவனுக்குரியவை பற்றியே இருந்தது. இவ்வாறு, வாழ்விலும், இறப்பிலும் இயேசு தன் மனதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.

மன்றாட்டு:
எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது மனதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, எப்போதும் உமக்கு உகந்தவை பற்றியே சிந்தித்ததுபோல, நாங்களும் எங்கள் மனதால் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக !