புனித வாரம்

செவ்வாய் ஏப்ரல், 03.04.2012


முதல் வாசகம்


உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 1-6

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் தூணியில் என்னை மறைத்துக்கொண்டார். அவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். நானோ, `வீணாக நான் உழைத்தேன்; வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்; ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். யாக்கோபைத் தம்மிடம் கொண்டுவரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல் ; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4. 5-6. 15,17 (பல்லவி: 15ய)

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். பல்லவி

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே, போற்றப் பெறுக; அடிக்கக் கொண்டுபோகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.

அக்காலத்தில் தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ``யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்'' என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், ``ஆண்டவரே அவன் யார்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்'' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், ``நீ செய்ய இருப்பதை விரைவில் செய்'' என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம். அவன் வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்'' என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்...அவருக்கு எதிராக நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு இறந்ததைக் கண்டு, 'இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்' என்றார்'' (மாற்கு 15:37,39)
மாற்கு நற்செய்தியில் காணப்படுகின்ற இயேசுவின் துன்பங்கள் பற்றிய பகுதி சில தனித்தன்மைகளைக் கொண்டது. இயேசு அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உயிர்துறக்கிறார். கடவுள் கூட அவரிடமிருந்து அகன்றுவிட்டதுபோலத் தோன்றிய வேளையில் இயேசு ''உரக்கக் கத்தி உயிர்விடுகிறார்'' (காண்க: மாற் 15:37). ஆனால், இருள் சூழ்ந்த அந்த நேரத்திலும் ஓர் ஒளிக்கதிர் அங்கே தோன்றி மிளிர்கின்றது. இயேசுவைத் தங்கள் எதிரியாகக் கருதிய உரோமை அதிகார வர்க்கத்தைச் சார்ந்த நூற்றுவர் தலைவரின் வாயிலிருந்து ஒரு மகத்தான உண்மை வெளிப்படுகிறது. அதாவது, நூற்றுவர் தலைவர் இயேசுவை ''இறைமகன்'' என அறிக்கையிடுகிறார். மாற்கு நற்செய்தி முழுவதுமே இங்கே தன் உச்சக் கட்டத்தை எய்துகிறது. இயேசு தம் பணிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே தம் சீடர்களுக்கு அறிவுறுத்திய உண்மை இங்கே அப்பட்டமாகிறது. மானிட மகன் துன்பங்கள் அனுபவிப்பார் என்றும், துன்பத்தின் வழியே வாழ்வு பிறக்கும் என்றும் இயேசு போதித்திருந்தார். இங்கே சிலுவையில் தொங்கும் இயேசு துன்பத்தின் உச்சக்கட்டத்தை எட்டிவிட்ட போதிலும் ''இறைமகன்'' எனப் போற்றப்படுகிறார். அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் இயேசுவை இவ்வாறு போற்றுகிறார். -- இயேசு ''இறைமகன்'' என்பதன் பொருள் என்ன? இயேசுவிடத்தில் நாம் கடவுளின் பண்புகளைக் காண்கின்றோம். கடவுள் என்றால் யார் என்பதை இயேசு தம் வாழ்வின் வழியாக, சாவின் வழியாக, உயிர்த்தெழுதல் வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார். கடவுன் அன்பு மயமாக இருக்கிறார் எனவும், அவரிடத்தில் துலங்குகின்ற இரக்கத்திற்கும் மன்னிப்பு வழங்கும் இதய நெகிழ்ச்சிக்கும் எல்லையே கிடையாது என இயேசு நமக்குக் காட்டுகிறார். நாம் உண்மையிலேயே இயேசுவை இறைமகன் என ஏற்று, நம்புகிறோமா?

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு ஏற்றிட அருள்தாரும்.