புனித வாரம் புதன்

புதன் ஏப்ரல், 04.04.2012


முதல் வாசகம்


நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9ய

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார். என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். பல்லவி

30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி



அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்



மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே. அல்லது பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.

அக்காலத்தில் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ``இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், `எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்'' என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ``ஆண்டவரே, அது நானோ?'' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ``என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ``ரபி, நானோ?'' என அவரிடம் கேட்க, இயேசு, ``நீயே சொல்லிவிட்டாய்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




இயேசு தன் முழு ஆளுமையிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தார், இறந்தார் என்னும் நமது சிந்தனையின் நான்காவது நாளாக இன்று இந்தக் கருத்தை சிந்திப்போம்: இயேசு தன் உணர்வுகளை ஒப்புக்கொடுத்தார்:
மனித ஆளுமையின் நான்காவது பரிமாணம் உணர்வுகள். மனிதர்கள் வெறும் உடலும், மனமும் கொண்டவர்கள் மட்டுமல்ல. உணர்வுகள கொண்;டவர்கள்: மகிழ்ச்சி, துயரம், அச்சம், நம்பிக்கை, அவமானம், கவலைரூhநடடip; என பலவிதமான உணர்வுகள் நம்மை ஆட்கொள்கின்றன. இயேசுவும் அனைத்து உணர்வுகளையும்; அனுபவித்தார். மகிழ்ச்சி, நம்பிக்கை, கவலையற்ற தன்மை, அமைதி போன்ற நேர்மறை உணர்வுகளோடு, அச்சம், துயரம், அவமானம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளையும் அனுபவித்தார், ஆனால், இவை அவரைப் பாவத்திற்கு இட்டுச்செல்லாதபடி காத்துக்கொண்டார். “சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்” (எபே 4:26) என்பதற்கேற்ப, அவர் சினம் கொண்டாலும் (எடு: மாற் 3:5), பாவம் செய்யவில்லை. வாழ்வில் இருந்ததுபோல, இறப்பிலும் அவர் உணர்வுகளை அனுபவித்தார். தனது சாவு நெருங்கி வந்தபோது, அவர் துயரமும், மனக்கலக்கமும் அடையத்தொடங்கினார் (மத் 26:37). “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது” (மாற் 14:34) என்று அவரே ஒப்புக்கொண்டார். தன் சீடன் ஒருவனே தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று எண்ணியபோது, அவர் உள்ளம் கலங்கினார் (யோவா 13:21). இருப்பினும், தனது உணர்வுகளையும் கடந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” (மத் 26:39) என்று வேண்டினார். தனது உணர்வுகளையும் இறைவனிடம் கையளித்தார். இறுதியில், “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30) என்று மனநிறைவு அடைந்தார்.

மன்றாட்டு:
உமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள் அனைத்தையும் தந்தையிடம் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உணர்வுகளை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, எப்போதும் தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்ததுபோல, நாங்களும் எங்கள் உண்ர்வுகளால் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக!