உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

வெள்ளி ஏப்ரல், 11.05.2012


முதல் வாசகம்


``எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் ''
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31

அந்நாள்களில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், ``திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள். யூதாவும் சீலாவும் விடை பெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 57: 7-8. 9-11

பல்லவி: என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்.

7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். -பல்லவி

9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! 11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. பல்லவி

8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. 13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். 15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்' என்றார்'' (யோவான் 16:7-8)

உயிர்த்தெழுந்த இயேசு தூய ஆவியை நமக்குத் துணையாளராக அனுப்புகிறார். நமக்குத் துணை செய்கின்ற ஆவியார் நம்மோடு தங்கியிருந்து நம்மை உறுதிப்படுத்துகிறார். இயேசு நமக்குக் காட்டிய வழியில் நாம் தவறாது நடந்து செல்ல நமக்குத் தூய ஆவியின் துணை எப்போதும் இருக்கும். தூய ஆவியின் செயல்களாக இயேசு மூன்றினைக் குறிப்பிடுகிறார்: ''அவர் வந்து, பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றிய'' உண்மையை நமக்கு உணர்த்துவார் என்பதன் பொருள் என்ன? (காண்க: யோவா 15:8). இங்கே நீதி மன்றக் காட்சியை நாம் காணலாம். நீதி மன்றத்தில் குற்றம் என்னவென்பது சுட்டிக் காட்டப்படும்; அது பற்றி இயேசுவை எதிர்த்துநின்ற ''உலகம்'' ஒரு பெரிய தவறிழைத்தது. அதாவது, கடவுளால் அனுப்பப்பட்டவரை அது ஏற்க மறுத்தது. இதுவே பெரிய பாவம் என அமைந்தது. இதைத் தூய ஆவி உணர்த்துவார். இரண்டாவதாக, தூய ஆவி கடவுளின் ''நீதி''யை நமக்கு வெளிப்படுத்துவார். அதாவது, இந்த ''உலகம்'' கண்டனம் செய்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து மாட்சிப்படுத்தியதே கடவுளின் ''நீதி''. இறுதியாக, தூய ஆவியார் ''தீர்ப்பு'' பற்றிய உண்மையை உணர்த்துவார். அதாவது, இயேசு வழியாகத் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்திய கடவுளிடம் திட்டத்தை எதிர்க்கும் சக்திகள் ஒருநாள் முறியடிக்கப்படும் என்பதையும் நமக்குத் தூய ஆவி வெளிப்படுத்துவார். -- நம் இதயம் என்னும் நீதி மன்றத்திலும் சரி, உலகம் என்னும் நீதி மன்றத்திலும் சரி, தூய ஆவியின் முப்பெரும் செயல் தொடர்கிறது. இயேசுவை நம்பி அவர் காட்டிய வழியில் நடப்போர் கடவுளின் அன்பை உணர்வார்கள். கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்தியதை ஏற்பார்கள். கடவுளின் திட்டம் நிறைவேறும்போது தங்கள் நம்பிக்கை தங்களை ஏமாற்றவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள். உலக மக்கள் முன்னிலையில் தூய ஆவியின் துணையோடு நாம் இயேசுவுக்குச் சான்று பகரும்போது இயேசுவைப் பற்றிய உண்மை அறிவிக்கப்படும்; கடவுளின் மாட்சி போற்றப்படும்; சீடர்களின் வாழ்வும் உலகின் வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக மாறும்.

மன்றாட்டு:
இறைவா, உம் தூய ஆவியின் வல்லமையை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.