உயிர்ப்புக்காலம் - 7 ஆம் வாரம்

வியாழன் ஏப்ரல், 24.05.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11

அந்நாள்களில் யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார். அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, ``சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்'' என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, ``இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!'' என வாதாடினர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, ``துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும். தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை




''இயேசு, 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீ என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என உலகம் நம்பும்' என்றார்'' (யோவான் 17:21)

இயேசு தம் சீடர்களோடு இறுதி இரா உணவு அருந்தியபின் அவர்களுக்காகக் கடவுளை வேண்டுகிறார். அந்த வேண்டலில் காணப்படுகின்ற ஒரு முக்கிய கருத்து ''ஒன்றிப்பு'' என்பதாகும். இயேசு முதலில் தமக்கும் தம் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற ஒன்றிப்புப் பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றிப்பு ஆழமானது. தந்தை என அவர் அழைத்த கடவுளிடமிருந்தே இயேசு வந்தார்; அவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார். தந்தையை இவ்வுலகிற்கு இயேசு வெளிப்படுத்தினார். எனவே இயேசுவைக் காண்போர் தந்தையையே காண்கின்றனர். இவ்விதத்தில் இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற ஒன்றிப்பு தனித்தன்மை வாய்ந்தது. அதே போல இயேசு தம் சீடர்களுக்கிடையேயும் ஆழ்ந்த ஒன்றிப்பு நிலவ வேண்டும் என வேண்டுகிறார். இத்தகைய ஆழ்ந்த ஒன்றிப்பு சீடர்கள் நடுவே நிலவும்போது தந்தையே இயேசுவை உலகிற்கு அனுப்பினார் என்னும் உண்மையை உலக மக்கள் ஏற்பர் (யோவா 17:21). -- ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'' என இயேசு எழுப்பிய மன்றாட்டைத் திருச்சபை இன்றும் தொடர்ந்து எழுப்புகின்றது. குறிப்பாக, பல பிரிவுகளாகச் சிதைந்து கிடக்கின்ற கிறிஸ்தவ சபைகள் எல்லாம் ஒன்றித்து வந்து, இணைந்து செயல்படும்போது இந்த உலகில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வது எளிதாகும். இதற்கு மாறாக, இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவுகின்ற பிளவுகள் கிறிஸ்துவை அறிவிக்க ஒரு பெரிய தடையாக உள்ளன. எனவேதான் திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் 18 முதல் 25 முடிய ''கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்'' என்றொரு காலத்தைக் கொண்டாடுகிறது. அப்போது கிறிஸ்தவ சபைகள் ஒன்றித்து வந்து தங்களிடையே ஆழமான ஒன்றிப்பு ஏற்பட வேண்டும் என்னும் கருத்தைப் புதிப்பித்துக் கொண்டு, அந்த ஒன்றிப்புக்காக இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்புகின்றன. கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி அண்மைக் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) கிறிஸ்தவ ஒன்றிப்பை ஒரு முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் ஒன்றித்துச் செயல்படும்போது உலக மக்களிடையே ஒற்றுமை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதில் ஐயமில்லை. அப்போது இயேசுவின் நற்செய்தி எல்லா மக்களின் வாழ்விலும் தாக்கம் கொணர்ந்து மனித இனத்தைப் புதுப்பிக்கின்ற சக்தியாக மாறும்.

மன்றாட்டு:
இறைவா, நாங்கள் உம்மோடு உறவாடி ஒன்றித்துச் செயல்பட அருள்தாரும்.