பொதுக்காலம் - 9 ஆம் வாரம்

சனி ஜூன், 09.06.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-8

அன்புக்குரியவரே, கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு. ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக்கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைகதைகளை நாடிச் செல்வார்கள். நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு; துன்பத்தை ஏற்றுக்கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய். ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 71: 8-9. 14-15யb. 16-17. 22 (பல்லவி: 15)

பல்லவி: ஆண்டவரே! என் வாய் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். பல்லவி

14 நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும். பல்லவி

16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி

22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 5: 3 - அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, �மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே� என்று கூறினார். இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, �இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்� என்று அவர்களிடம் கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்'' (மாற்கு 12:41-42)

எருசலேம் கோவிலுக்குச் சென்ற மக்கள் கடவுளுக்கென்று காணிக்கை அளித்தார்கள். கோவில் வழிபாட்டுக்கும் பிற செலவுகளுக்கும் அக்காணிக்கை பயன்பட்டது. காணிக்கை அளிப்பதன் வழியாக மக்கள் தங்கள் சமய உணர்வை வெளிப்படுத்தினார்கள். சிலர் தங்களது செல்வக் கொழிப்பைக் காட்டுகின்ற தருணமாக அதைக் கருதியிருக்கலாம். மக்கள் காணிக்கை போடுவதை இயேசு கூர்ந்து பார்க்கிறார். எல்லாரும் பார்க்கும் விதத்தில், கேட்கும் விதத்தில் அவர்கள் போடுகின்ற செப்பு நாணயம் காணிக்கைப் பெட்டியில் விழுந்து ஒலி எழுப்புகிறது. அப்போது அங்கே வருகிறார் ஓர் ஏழைக் கைம்பெண். அவரிடத்தில் செல்வம் கிடையாது. அவர் கைவசம் இருக்கும் செல்வம் இரண்டு சிறு காசுகளே. அவற்றின் மதிப்பு இன்றைய கணிப்புப்படி ஒரு சில பைசா மட்டுமே. அந்த இரு சிறு காசுகளையும் அப்பெண் காணிக்கையாக அளிக்கிறார். இதைக் கண்ட இயேசு அப்பெண்ணின் தாராள உள்ளத்தைப் பாராட்டுகிறார். அவர் ''தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்'' (காண்க: மாற் 12:44) என இயேசு அவருடைய செயலைப் புகழ்கிறார். -- இதிலிருந்து நாம் இரு கருத்துக்களைப் பெறலாம். அந்த ஏழைக் கைம்பெண்ணை இயேசு பாராட்டியதற்குக் காரணம் அவர் கொடுத்த தொகை பெரிது என்பதல்ல, மாறாக, அவர் தமக்கென்று எதையுமே தக்க வைக்காமல் ''எல்லாவற்றையுமே'' காணிக்கையாகப் போட்டுவிட்டார் என்பதே. கடவுளை முழு உள்ளத்தோடு நாம் அன்புசெய்ய வேண்டும் (காண்க: மாற் 12:29-30) என்று இயேசு கூறியதற்கு அப்பெண் முன் உதாரணம் ஆகின்றார். அவருடைய காணிக்கை ''முழுமையானதாக'' இருந்தது. அவர் கடவுளுக்குத் தம் உயிரையே காணிக்கையாக்கிவிட்டார். இன்னொரு கருத்து, அந்த ஏழைக் கைம்பெண் ஏன் அவ்வாறு காணிக்கை அளித்தார் என்பதைப் பற்றியது. அக்காலத்தில் ''கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கியவர்கள்'' இருந்தார்கள் என இயேசு கூறினார் (காண்க: மாற் 12:40). கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால் மக்களைச் சுறண்டிய அதிகாரிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். மனிதர் மாண்போடு வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமேயன்றி, அவர்கள் சமயச் சட்டங்களுக்கு அடிமைகளாக்கப்பட்டு, துன்பத்தில் வாட வேண்டும் என்பதல்ல (காண்க: மாற் 2:23-28; 3:1-5; 7:9-13). ஆயினும், இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள உள்ளத்தைப் போற்றினார். இயேசுவும் தம்மையே முழுமையாக நமக்குக் கையளித்தார்; தம் உயிரை நமக்குக் ''காணிக்கையாக்கினார்''. அவரைப் போல, அந்த ஏழைக் கைம்பெண்ணைப் போல நாமும் முழு உள்ளத்தோடு கடவுளை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:
இறைவா, தாராள உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.