பொதுக்காலம் - 11 ஆம் வாரம்

திங்கள் ஜூன், 18.06.2012


முதல் வாசகம்



அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. ஆகாபு நாபோத்திடம், �உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்� என்றான். அதற்கு நாபோத்து ஆகாபிடம், �என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!� என்றான். �என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்� என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான். அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, �நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?� என்று அவனைக் கேட்டாள். அ தற்கு அவன் அவளிடம், �நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். �உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்� என்றேன். அதற்கு அவன் �என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்� என்று சொல்லிவிட்டான்� என்றான். அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, �இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்� என்றாள். எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், �நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, �நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்� என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்� என்று எழுதியிருந்தாள். நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர். அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, �நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்� என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர். பிறகு அவர்கள், ``நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்� என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர். நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, �நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்� என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 5: 1-2ய. 4-5ய. 5b-6 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். 2ய என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். பல்லவி

4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார். பல்லவி

தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 119: 105 - அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்றார்'' (மத்தேயு 5:39)

நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? அநீதிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. ஆனால் அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கற்பிக்கிறார். தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பிறரை வன்முறையால் தாக்குவோரை நாம் எவ்வாறு நடத்துவதது என்பதற்கு இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். வலது கையின் பின்புறத்தைக் கொண்டு பிறருடைய கன்னத்தில் அறைவது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்பட்டது. அச்சூழ்நிலையில் பழிக்குப் பழி என்று எண்ணாமல், நாம் இடது கன்னத்தைக் காட்டினால் நம்மைத் தாக்குவோர் வலது கையின் பின்புறத்தைக் கொண்டு நம்மை இன்னொரு முறை அறைய இயலாது. இதனால் அவர் வெட்கமுற்றுத் தம் நடத்தையைத் திருத்தலாம் (மத் 5:39). இரண்டாம் எடுத்துக்காட்டு அக்கால மனிதர் உடுத்துகின்ற ஆடைகளைப் பற்றியது. கடன் கொடுத்த ''ஒருவர் உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்'' என இயேசு கூறுகிறார் (மத் 5:40). அக்காலத்தில் மக்கள் உள்ளாடை (அங்கி), மேலாடை என இரண்டு ஆடைகளை அணிவது வழக்கம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க இயலா நிலையில் உள்ள ஏழை மனிதரிம் சென்று, அவருடைய உள்ளாடையைப் பறிக்க வருபவரிடம் தம் மேலாடையையும் கொடுத்துவிட்டால் அம்மனிதர் அம்மணமாகத்தான் நிற்பார். இதைக் கண்டாவது கடன் கொடுத்த மனிதர் வெட்கமுற்று, தம் செயல் முறையற்றது என உணர்ந்து மனம் மாறலாம் என்பது எதிர்பார்ப்பு. இங்கே அக்காலத்தில் நிலவிய அநீதியான பொருளாதார அமைப்பை இயேசு கடிந்துகொள்கிறார். மேலும் கடன் கொடுத்தவரும் கடன் பெற்றவரும் கடவுள் முன் அம்மணமாகவே உள்ளனர் என்பதால் அவர்களுடைய மனித மாண்பு மீறத் தகாதது எனவும் இயேசு குறிப்பாக உணர்த்துகிறார். -- மூன்றாம் எடுத்துக்காட்டு உரோமைப் படைவீரர்களின் செயல் பற்றியது. தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படைவீரர்கள் சாதாரண மக்களைக் கட்டாயப்படுத்தித் தம் பொருள்களைச் சுமந்து வழிநடக்க வற்புறுத்தும் பழக்கம் இருந்தது. இவ்வாறு ஒரு கல் தொலை செல்லக் கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இரண்டு கல் தொலை செல்வதாக இருந்தால் அந்தப் படைவீரருக்கு அவருடைய மேலதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைக்கும் (மத் 5:41). இவ்வாறு ''இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்போது'' (குறள் 987) அவர்கள் வெட்கமுற்று மனம் திரும்பலாம் என்பது எதிர்பார்ப்பு. இயேசு கூறிய இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் பிற்காலத்தில் மகாத்மா காந்தி வழங்கிய அகிம்சைக் கொள்கை துலங்குவதை நாம் காணலாம். வள்ளுவர் ''இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?'' எனக் கூறும் செய்தியும் இயேசுவின் போதனையை எதிரொலிப்பதை இங்கே நாம் காணலாம்.

மன்றாட்டு:
இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும்.