பொதுக்காலம் - 12 ஆம் வாரம்

வெள்ளி ஜூன், 29.06.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது. ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, ``உடனே எழுந்திடும்'' என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன. வானதூதர் அவரிடம், ``இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்'' என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், ``உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்'' என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார். பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, ``ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மத் 16: 18 - அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


இறையாட்சி எனப்படுவது கடவுளும் மனிதரும் சேர்ந்து கட்டியெழுப்புவதாகும். இவ்வாறாக இறையாட்சியைக் கட்டியெழுப்பி ஆதித்திருச்சபையின் மாபெரும் தூண்களாக வாழ்ந்த இரு மனிதர்களே இன்றைய நாளில் நாம் நினைவுகூரும் திருத்தூதர்கள்.

இவ்விருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான சுபாவமுடையவர்கள். பேதுரு படிப்பறிவற்ற சாதாரன மீன்பிடித் தொழிலாளி. மனிதர்களைப் பிடிப்பவராக மாற்றப்பட்டு திருச்சபையின் தலைமைக்கல்லாக உயர்த்தப்பட்டார். இறுதியில் கிறிஸ்துவுக்காகத் தலைகீழாக அறையப்பட்டு மரித்துப் புனிதராக உயர்த்தப்பட்டார். தலைமைப்பாறை பேதுரு குறித்து நான்கு நற்செய்தியிலும் திருத்தூதர்கள் பணியிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சவுல் எனப்பட்ட பவுல் அடிகள் கமாலியேல் எனப்படும் யூத மத அறிஞரிடம் கற்றுத்தேறிய வல்லுனர்;. கிறிஸ்து இயேசுவை ஆண்டவரென ஏற்றுக் கொண்டவர்களைக் கொலைசெய்ய ஆணைபெற்ற யூதப்படைவீரர். எந்த அரசரின் கட்ளைக்காக கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினாரோ, அதே அரசரது படைவீர்களால் சிறைபிடிக்கப்பட்டார், சித்திரவதைக்கு உள்ளாகி மரணமடைந்து புனிதராக உயர்த்தப்பட்டார். பவுல் அடிகளாரைக் குறித்து திருத்தூதர் பணியில் புனித ஸ்தோவானின் மரணத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் இயேசுவை மெசியா என அறிவிக்கும் இறையாட்சிப் பணியில் நாம் எப்படிப்பட நிலையில் இருக்கின்றோம்? எமது குடும்பங்களில், வேலைத்தளத்தில், சமூகத்தில் எமது ஒவ்வொரு சிறியசெயல்களாழும் ஆண்டவர் இயேசுவை அடுத்தவர்களுக்கு அறிவிக்கலாம். அந்த உன்னதமான பணிக்கென எம்மைத் தயார்செய்வோம். இன்றைய புனிதர்கள் இருவரும் தமது பணிவாழ்வின் ஆரம்பத்தில் வாழும் மெசியாவான ஆண்டவர் இயேசுவின் மட்டில் இடறல்பட்டாலும், இறுதியில் ஆண்டவர் இயேசுவுக்காகத் தமது உயிரையே கொடுத்தவர்கள். ஆயினும் நாம் எம்மாத்திரம்? நீரே மெசியா வாழும் கடவுளின் மகன் என எப்போது அறிக்கை செய்யப்போகின்றோம்?

மன்றாட்டு:
மாறாத தெய்வமே! அடிமை நான் உம்மிலே வைத்துள்ள நம்பிக்கை என்றுமே மாறாதிருக்க என்னைக் காத்தருளும் - ஆமென்.