பொதுக்காலம் - 14 ஆம் வாரம்

செவ்வாய் ஜுலை , 10.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7,11-13

ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர். எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9ய)

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! பல்லவி

5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை; 6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. பல்லவி

10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. பல்லவி

7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. 8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். பல்லவி

9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 10: 14 - அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, ``இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை'' என்றனர். ஆனால் பரிசேயர், ``இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை

வாய்பேச இயலாத பேய்பிடித்தவனை அவரின் நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசு குணமாக்குவார் என்ற நம்பிக்கை அந்த நண்பர்களுக்கு இருந்தது. இந்த நண்பர்களுக்கு நேயுற்றிருந்த அம்மனிதர் மீது அக்கறையும் பரிவன்பும் இருந்தது. வாழ்கையில் எத்தகைய துன்பத்தை இத்தகைய மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந் நண்பர்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசுவும் பேச இயலாத பேய்பிடித்தவருக்கு உடனடியாக முழு குணமளிக்கின்றார். மனிதராக மதிக்கப்படாதவரை முழு மனிதனாக்குகிறார். நம்பிக்கையோடு இயேசுவை அனுகிகின்றவர்களை இயேசு ஒருநாழும் கைவிடுவதில்லை. அதேவேளையில் மக்கள் மத்தியில் வியப்பும் இன்னும் சிலர் மத்தியில் குறைகாணும் பண்பும் வெளிப்படுகின்றது. பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் குறைகூற முற்படுகிறார்கள். தங்களுடைய மமதையால் இயேசுவை குற்றவாளியாக்க முற்படுகிறார்கள். அவர்களிம் உதவி செய்யும் மனப்பான்மை இல்லை உதவி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இல்லை.

மன்றாட்டு:
அன்புள்ள இறைவா, துன்பப்படும் அயலார் மீது பரிவிரக்கம் கொள்ளும் நல் மனத்தையும் நல்மனத்தோடு உதவிசெய்யும் நல்லுள்ளம் படைத்தோரை போற்றவும், எங்கiளால் நற்செயல் செய்முடியாத பட்சத்தில் நற்செயல் புரிவோரை உற்சாகப்படுத்தும் நல் மனத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.