பொதுக்காலம் - 16 ஆம் வாரம்

புதன் ஜுலை , 25.07.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1,4-10

பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: `தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்'. நான், `என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே' என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: `` `சிறுபிள்ளை நான்' என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,' என்கிறார் ஆண்டவர்.'' ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: ``இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4ய. 5-6யb. 15யb,17 (பல்லவி: 15யb)

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி

6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். 7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்...உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்' என்றார்'' (மத்தேயு 20:25-26)

பிறர் முன்னிலையில் தம்மைப் பெரியவராகக் காட்டவேண்டும் என்னும் சோதனை மனிதருக்கு ஏற்படுவதுண்டு. இச்சோதனையை வெல்லும் வழி யாதென இயேசு நமக்குக் காட்டுகிறார். அதாவது, ''உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்'' என்பது இயேசு நமக்கு வழங்கும் அறிவுரை (மத் 20:26). இயேசுவை நெருக்கமாகப் பின்சென்றவர்கள் ''அப்போஸ்தலர்கள்'' என அழைக்கப்படுகின்ற பன்னிரு ''திருத்தூதர்கள்''. இவர்களுக்கிடையே ''யார் பெரியவர்'' என ஒரு பெரிய போட்டியே எழுகிறது. யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாய் இயேசுவிடம் சென்று தம் மக்கள் இருவரும் இயேசுவின் ஆட்சியில் முக்கிய இடம் பெற வேண்டும் என்று கேட்டதாக மத்தேயு குறிப்பிடுகிறார் (மத் 20:20-21). யாக்கோபும் யோவானும் நேரடியாகவே இயேசுவிடம் கேட்டதாக மாற்கு எழுதுகிறார் (மாற் 10:35-37). பதவியும் அந்தஸ்தும் ஒருவரைப் பெரியவராக்குவதில்லை என இயேசு தம் சீடர்களுக்குக் கற்பிக்கிறார். பிறரை ''அடக்கி ஆளலாம்'' என நினைக்காமல் ''தொண்டுசெய்ய'' யார் முன்வருகிறார்களோ அவர்களே உண்மையில் ''பெரியவர்கள்'' (மத் 20:25-26). தொண்டராக செயல்படுவது எப்படி என்பதையும் இயேசுவே தம் வாழ்வில் காட்டினார். இறுதிவரை பிறருக்காக வாழ்வதும் பிறர் நன்மைக்காக இறப்பதற்கும் தயாராக இருப்பதும்தான் தொண்டரின் பண்பு. -- இயேசு தொண்டு ஆற்ற வந்தாரே ஒழிய தொண்டு ஏற்பதற்கல்ல (மத் 20:28). அவர் ''பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பார்'' (மத் 20:28). இங்கே ''பலர்'' என்பது எபிரேயத்தில் ''எல்லாரும்'' எனப் பொருள்படும். அதாவது, உலக மக்கள் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக இயேசு தம் உயிரையே பணயமாக்குகிறார். அக்காலத்தில் அடிமைகள் விடுதலை பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை கட்டவேண்டும். இயேசு தம் உயிரையே பணயத் தொகையாகக் கொடுத்து நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் விடுவிக்கிறார் என்பது பொருள். இன்று நாம் இயேசுவைப் போலத் தொண்டாற்ற அழைக்கப்படுகிறோம். பதவியையும் புகழையும் நமக்கென்று தேடாமல், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக நம்மையே அர்ப்பணிக்கின்ற ''தொண்டு'' மனப்பான்மை நம்மில் வளர வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, பிறர் உயர நாங்கள் உழைத்திட அருள்தாரும்.