பொதுக்காலம் - 19 ஆம் வாரம்

வியாழன் ஆகஸ்ட் , 16.08.2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-12

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: `மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார். மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறொர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம். நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு. அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச் செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.'' எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப் படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன். காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், `நீ செய்கிறது என்ன?' என்று கேட்கவில்லையா? நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்; நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப் பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர். அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக் கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 78: 56-57. 58-59. 61-62 (பல்லவி: 7b)

பல்லவி: இறைவனின் செயல்களை ஒருபோதும் மறவாதிருங்கள்.

56 ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. 57 தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். பல்லவி

58 தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர். 59 கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார். பல்லவி

61 தம் வலிமையை அடிமைத்தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்; 62 தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச் சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது. பல்லவி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 119: 135 - அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21 - 19: 1

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன். விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ``பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங்கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''பேதுரு இயேசுவை அணுகி, 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: 'ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்' (மத்தேயு 18:21-22)

நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிப்பதைப் பொறுத்தே நமக்குக் கடவுளின் மன்னிப்பும் கிடைக்கும் என இயேசு நமக்குக் கற்றுத் தந்த இறைவேண்டலில் கூறுகிறார் (காண்க: மத் 6:14-15). இருப்பினும், எத்தனை முறை பிறரை மன்னிக்க வேண்டும் என்னும் கேள்வியைப் பேதுரு எழுப்புகிறார். மன்னிப்புக்கு எல்லையே இல்லையா? ஏழு முறை மன்னித்தால் போதுமா? இவ்வாறு பேதுரு கேட்ட கேள்வியில் அடங்கியுள்ள பொருளைப் பார்ப்போம். நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மூன்று முறை மன்னிக்க வேண்டும் என்பது யூத அறிஞர்கள் தந்த வழிமுறை. அப்பின்னணியில் ''ஏழு முறை மன்னித்தால் போதுமா?'' என பேதுரு கேட்டது அவருடைய தாராள உள்ளத்தையே காட்டுகிறது. மன்னிப்பின் தேவையையும் சிறப்பையும் உணர்த்த இயேசு பேதுருவுக்கு ஒரு கதை சொல்லி விளங்கவைக்கிறார். பெரும் தொகையை ஓர் அரசரிடமிருந்த கடனாகப் பெற்ற பணியாளர் தன் கடனைச் செலுத்த இயலாதிருந்தபோது அவருக்குக் கடன்கொடுத்த அரசர் அதைத் தாராள மனம் கொண்டு மன்னித்துவிடுகிறார். ஆனால் இவ்வாறு மன்னிக்கப்பட்ட அந்த மனிதர் வேறு ஒருவருக்கு ஒரு சிறிய தொகையையே கடனாகக் கொடுத்திருந்தார். அச்சிறிய கடனைத் திருப்பிக்கொடுக்க இயலாத மனிதரை ஏற்கெனவே பெரும் கடன் நீக்கப்பட்ட மனிதர் மன்னிக்க முன்வரவில்லை. இதைக் கேள்விப்பட்ட அரசர் கோபமடைகிறார்; மன்னிக்க மறுத்த பணியாளருக்குத் தாமும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறிவிடுகிறார். இக்கதை வழியாக இயேசு உணர்த்தகின்ற உண்மைகள் இரண்டு. முதலில், கடவுள் நம் பாவம் என்னும் கடனைத் தாராள உள்ளத்தோடு மன்னித்திருக்கின்றார். எனவே, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும் மனிதரை மனதார மன்னிக்க வேண்டும். -- இவ்வாறு மன்னிப்பதற்கு நாம் எவ்வித எல்லைக் கோடுகளையும் இடலாகாது. எத்தனை தடவை மன்னிப்பது என்று கேட்பதே பொருத்தமற்றது. ஏனென்றால் கடவுள் நம் பாவங்களை எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்பதில்லை. மாறாக, அவர் நம் பாவங்களை எப்போதுமே மன்னிக்கிறார். அதுபோல, நாமும் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை எப்போதுமே மன்னிக்க வேண்டும். ''ஏழு முறை மன்னிப்பதா?'' என்று பேதுரு நல்ல மனத்தோடுதான் கேட்டார். ஆனால் இயேசு ''எழுபது தடவை ஏழுமுறை மன்னிக்க வேண்டும்'' என்று கூறி, மன்னிப்பின் தேவையை உணர்த்தினார். அதாவது, எத்தனை தடவை மன்னித்தேன் என்று கணக்குப் போடுவதே சரியல்ல என்பது இயேசுவின் போதனை. மேலும் இயேசு மன்னிப்பின் தேவை பற்றிக் கூறிய கதையில் வருகின்ற இரு கடன் தொகைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அரசரிடமிருந்து பணியாளர் பெற்ற கடன் மிக மிகப் பெரிது. இக்கால வழக்கில் கூறுவதாக இருந்தால் அது கோடிக் கணக்கான ரூயஅp;பாய் கடன் எனலாம். இரண்டாவது மனிதர் செலுத்த வேண்டிய கடன் தொகை நுறு நாள் வேலைக் கூலிக்குச் சமம். எனவே பிறர் நமக்கு எதிராகச் செய்கின்ற சிறிய குற்றத்தை நாம் மன்னிக்காவிட்டால் நாம் கடவுளுக்கு எதிராகச் செய்கின்ற பெரும் குற்றத்தைக் கடவுளும் மன்னிக்க மாட்டார் என்பது பொருள். இது ஒருசில தடவை வழங்கப்படுகின்ற மன்னிப்பு அல்ல. மாறாக, கடவுள் நம் பாவங்களை ஏற்கெனவே மன்னித்துவிட்டதால் நாமும் பிறருடைய குற்றங்களை ஒருசில முறை மட்டுமன்றி, எப்போதுமே மன்னிக்க வேண்டும். கடவுள் நம்மீது ''பரிவு'' கொண்டது போல (மத் 18:27) நாமும் பிறர்மீது பரிவுகொண்டு, அவர்களை ''மனமார'' மன்னிக்க அழைக்கப்படுகிறோம் (மத் 18:35).

மன்றாட்டு:
இறைவா, பிறர் குற்றங்களை நாங்கள் எப்போதும் மன்னிக்க எங்களுக்கு அருள்தாரும்.