பொதுக்காலம் - 22 ஆம் வாரம்

வெள்ளி ஆகஸ்ட் , 07.09.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 (பல்லவி: 39ய)

பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். பல்லவி

5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். 6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 8: 12 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-39

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, ``யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!'' என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்'' என்றார். அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: ``எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் `பழையதே நல்லது' என்பது அவர் கருத்து.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, '...உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்றனர்'' (மத்தேயு 9:14)

நோன்பு என்பது பல சமயங்களுக்கும் பொதுவானது. இந்திய நாட்டில் நோன்புகளுக்கும் விரதங்களுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்துக்கள் ஏகாதசி, மகாராத்திரி போன்ற நோன்புகளையும், இஸ்லாமியர் ரம்சான் நோன்பையும் கடைப்பிடிப்பர். யூத சமயமும் நோன்புக்கு முக்கியத்துவம் அளித்தது (காண்க: லேவி 23:27-32; எண் 29:7). ஆயினும் உண்மையான நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சிகளில் அல்ல, உள்ளத்தைத் தூய்மையாகக் கொண்டு, ஏழைகளுக்கு மனமுவந்து உதவுவதும் நீதியை நிலைநாட்ட உழைப்பதும்தான் நோன்பின் உட்பொருள் என்னும் கருத்து இஸ்ரயேலில் வலியுறுத்தப்பட்டது (காண்க: எசா 58:1-13). இயேசு நோன்பு பற்றி எடுத்துரைத்த கருத்து புரட்சிகரமானது. அவர் பல யூத பழக்கங்களைப் புரட்டிப்போட்டார். அதாவது அப்பழக்கங்களின் உண்மையான பொருளை எடுத்துரைத்தார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அக்காலத்துப் பரிசேயரைப் போல நோன்பைக் கடைப்பிடித்தனர். அப்படியானால் இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்வி எழுந்தது. இயேசு அவர்களை விட்டுப் பிரிந்தபிறகு அவர்கள் நோன்பு இருப்பார்கள் என இயேசு பதிலிறுத்ததன் வழியாக நோன்பின் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார் (மத் 9:15). -- இயேசுவைப் பின்பற்றுவோர் துன்பங்களுக்கு ஆளாவர். அவர்கள் இயேசுவின் போதனையை ஏற்று வாழும்போது இவ்வுலக மதிப்பீடுகளைப் பின்பற்றாமல் இயேசுவின் மதிப்பீடுகளையே தம் வாழ்க்கையின் மையமாகக் கொள்வதால் உலகப் போக்குக்கு எதிராகச் செல்வார்கள். அப்போது அவர்களுக்குத் துன்பங்கள் வரும். அவற்றை மனமுவந்து ஏற்று, இயேசுவுக்காக வாழ்வதும் அவருக்காகச் சாகவும் துணிவதும் சீடரின் பண்பாக மாறும். இதுவே அவர்களின் நோன்பாக அமையும். ஆக, உணவைக் குறைத்து, உடலைச் சுருக்கும் நோன்பு தவறு எனக் கூறவில்லை இயேசு. மாறாக, அவரைப் பின்பற்றுவதில் நாம் நிலைத்திருக்கும்போது எழுகின்ற துன்பங்களை மனமகிழ்வோடு ஏற்க வேண்டும் எனக் கேட்கிறார்.

மன்றாட்டு:
இறைவா, இயேசுவை மனமுவந்து பின்சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.