பொதுக்காலம் - 22 ஆம் வாரம்

சனி ஆகஸ்ட் , 08.09.2012


தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா


முதல் வாசகம்



இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5ய

ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10ய)

பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். பல்லவி

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். ``இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்'' (மத்தேயு 1:24)

இயேசுவின் வாழ்க்கை, பணி, போதனை ஆகியவற்றை உள்ளடக்கிய நற்செய்தி நூல்கள் நான்கிலும் யோசேப்பு பற்றிய பகுதிகள் சிலவே. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக யோசேப்பு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டார். கடவுளுடைய திட்டம் நிறைவேற யோசேப்பு ஒத்துழைத்தார். அதுவே அவருடைய வாழ்க்கையைச் சிறப்படையச் செய்தது. யோசேப்பு கனவின் வழியாகக் கடவுளிடமிருந்து கட்டளை பெறுவதும், கடவுள் தருகின்ற வழிமுறைக்கு ஏற்ப நடப்பதும் பழைய ஏற்பாட்டு யோசேப்பின் கதையை நமக்கு நினைவூட்டுகிறது (தொநூ 37:5-11). அங்கே யோசேப்புவின் வாழ்க்கை பற்றிய முக்கிய செய்திகளைக் கடவுள் கனவில் அவருக்கு அறிவித்தார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு பற்றி அதிக விவரங்கள் தரப்படாவிட்டாலும் ''யோசேப்பு நேர்மையாளராக இருந்தார்'' (காண்க: மத் 1:19) என்னும் செய்தி அவருடைய வாழ்க்கையைச் சுருக்கமாக நம் கண்முன் கொணர்கிறது. ''நேர்மையாளர்'' என்னும் சொல்லுக்கு விவிலியத்தில் தனிப்பொருள் உண்டு. அதாவது யார்யார் கடவுளுக்கு அஞ்சி, அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்கின்றார்களோ அவர்கள் ''நேர்மையாளர்'' என அறியப்பட்டார்கள். யோசேப்பு இத்தகைய நேர்மையாளர் வரிசையில் வருகிறார். -- யோசேப்பின் ''நேர்மை'' எவ்வாறு துலங்கியது? முதலில், யோசேப்பு மரியாவின் கணவர் என்னும் முறையிலும் இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்னும் முறையிலும் அவர்களைப் பேணிப் பராமரித்தார் என்பதில் ஐயமில்லை. யோசேப்பு மரியாவைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு கூடிவாழ்வதற்கு முன்னரே மரியா கருவுறுகிறார். இச்செய்தியை அறிந்த யோசேப்பு அதிர்ச்சியடைகிறார். என்றாலும் மரியாவை இகழ்ச்சிக்கு உட்படுத்துவது சரியல்ல என அவர் முடிவுசெய்து மறைவாக விலக்கிடத் திட்டமிட்டபோது அவருக்கு உண்மை தெரியவருகிறது. ''மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என்னும் செய்தி அவருக்குக் கடவுளிடமிருந்து கனவின் வழியாக வருகிறது. இதை யோசேப்பு எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கிறார். யோசேப்பின் நேர்மை என்பது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருந்தது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் யோசேப்பைப் போல ''நேர்மையாளர்களாக'' நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் நேர்மை விளங்கச் செய்தருளும்.