பொதுக்காலம் - 23 ஆம் வாரம்

திங்கள் ஆகஸ்ட் , 10.09.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன். நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம். நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 5: 4-5ய. 5b-6. 11 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

4 நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். பல்லவி

5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 10: 27 - அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து நடுவே நில்லும்!'' என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, ``உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, ``உமது கையை நீட்டும்!'' என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்'' (லூக்கா 6:7)

இயேசுவிடம் குற்றம் காண்பதற்கென்றே மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவைக் ''கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர்'' (காண்க: லூக் 6:7). சிலர் குற்றம் காண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். பிறர் ஏதாவது தவறு செய்ய மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனிதர்கள் நல்ல எண்ணத்தோடு செயல்படுவதில்லை. மாறாக, பிறருடைய குற்றங்களைச் சுட்டிக் காட்டி, தாங்கள் அவர்களை விடவும் மேலானவர்கள் என தங்களையே ஏமாற்றிக்கொள்கிறவர்கள் இவர்கள். அல்லது பிறரைத் தாழ்த்துவதன் மூலம் தாங்கள் உயர்ந்துவிடலாம் என நினைத்து இவர்கள் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். இயேசுவை அணுகிய ''மறைநூல் அறிஞரும் பரிசேயரும்'' இவ்வகையைச் சார்ந்தவர்களே. லூக்கா நற்செய்தியாளர் இயேசுவுக்கும் அக்கால யூத சமயத் தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது எனவும், அவர்கள் இயேசுவை எதிர்த்து நின்றார்கள் எனவும் பதிவு செய்துள்ளார் (காண்க: லூக் 6:11). லூக்கா கூறுவது வரலாற்று உண்மையா அல்லது மிகைக் கூற்றா என்னும் கேள்வி எழுகிறது. விவிலிய அறிஞர்கள் இக்கேள்விக்குத் தருகின்ற விளக்கம் இது: இயேசுவின் வரலாற்றைப் பதிவு செய்கின்ற லூக்கா அவ்வரலாற்றின் தொடக்கத்திலேயே இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இருந்தார்கள் எனக் காட்டுகிறார். இது ஓர் இலக்கிய உத்தியாகக் கூட இருக்கலாம். மேலும், இயேசு நிலைநாட்ட விரும்பிய உண்மை என்னவென்றால், சமயச் சடங்குகளை விடவும் மனித உயிரையும் மாண்பையும் மதிப்பது தேவை. அதாவது, சடங்கு முறையை விட உயர்ந்தது அறநெறி சார்ந்த கடமை என்னும் போதனையை இயேசு வழங்குகிறார். -- எனவே, ஓய்வு நாள் என்பது ஒரு சமயம் சார்ந்த சடங்கு அனுசாரம். ஆனால் நோயுற்ற மனிதரைக் கரிசனையோடு கவனிப்பதும், அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பதும் அறநெறி சார்ந்த முதன்மை. பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மக்களைத் தீட்டுப் படுத்துவது யாது என்னும் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டனர்; சமையலுக்குப் பயன்படும் புதினா போன்ற செடிகளில் பத்தில் ஒருபங்கைக் காணிக்கையாக்க அளிக்க வேண்டும் எனவும் ஓய்வு நாளில் எவ்வளவு தூரம் நடப்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது எனவும் நிர்ணயிப்பதில் நேரத்தைச் செலவிட்டனர். இப்போக்கினை இயேசு கண்டித்தார். இந்த நிலைப்பாட்டின் விளைவாக இயேசு யூத சமயத் தலைவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. தமது போதனையை ஏற்காத மனிதரை விட்டுவிட்டு இயேசு தமக்குச் செவிமடுத்தவர்களிடம் திரும்பினார். இறையாட்சி பற்றி இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்றவர்கள் இயேசுவிடம் ஓர் அதிசய சக்தி விளங்கியதைக் கண்டார்கள். இயேசு வழியாகக் கடவுளே பேசுகிறார் என அவர்கள் உணர்ந்தார்கள். இத்தகைய மக்கள் நடுவிலிருந்து இயேசு பன்னிருவரைத் தேர்ந்துகொண்டார் (லூக் 6:12-13). அவர்களுக்குத் ''திருத்தூதர்'' என்பது பெயர் (லூக் 6:13). இதை லூக்கா கோடிட்டுக் காட்டுகிறார். தூற்றுவார் தூற்றட்டும், மனம் திறந்து கேட்பார் தம் பணியைத் தொடரட்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை ஆயிற்று. இயேசுவின் பணியை ஆற்றிட நாம் அழைக்கப்படுகிறோம். அவர் கடவுளின் திருத்தூதராக நம்மிடையே வந்து, நம்மைத் தம் சீடராக ஏற்று, நாம் அவரது பணியைத் தொடர நம்மையும் திருத்தூதர்களாக அனுப்புகிறார்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனால் அனுப்பப்படுகின்ற தூதர்களாக நாங்கள் செயல்பட அருள்தாரும்.