பொதுக்காலம் - 23 ஆம் வாரம்

புதன் செப்டம்பர், 12.09.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10ய)

பல்லவி: கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!

10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 6: 23 - அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே' என்றார்'' (லூக்கா 6:21)

மனிதர் தம் வாழ்வில் எதிர்கொள்கின்ற அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள். பிறர் வழியாகவும் சமூக நடைமுறை வழியாகவும் நாம் பெறுகின்ற மதிப்பீடுகளும் உண்டு. ஆனால் இவ்வாறு நாம் பெறுகின்ற மதிப்பீடுகளையெல்லாம் கடவுளின் பார்வையோடு நாம் அணுகவேண்டும். இயேசு லூக்கா நற்செய்தியில் வருகின்ற ''சமவெளிப் பொழிவின்'' போது ''ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்'' என்றார். வழக்கமாக, ஏழைகள் என்றால் பிறரால் இகழப்படுகிறவர்கள்; அவர்களைப் பிறர் மதிப்பதில்லை. இது உலகப் போக்கு. ஆனால் இயேசு அப்போக்கினை வேரோட்டமாக மாற்றியமைக்கிறார்; புரட்டிப் போடுகிறார். செல்வமும் வசதியும் சொத்தும் சுகமும் யாருக்கு இல்லையோ அவர்களுக்குக் கடவுளின் ஆசியில்லை என மக்கள் எண்ணிய காலத்தில் இயேசு அவர்களுடைய எண்ணத்தை மாற்றுகிறார். -- இன்றைய உலகில் ஏழை என்றால் பலர் ஏளனமாகத்தான் நினைக்கிறார்கள். ஏழைகளுக்குச் செல்வம் இல்லை என்பது மட்டுமல்ல, செல்வாக்கும் இருப்பதில்லை. அவர்களுடைய உரிமைகள் எளிதில் மறுக்கப்படுகின்றன; அவர்கள் மனித மாண்போடு நடத்தப்படுவதும் இல்லை. இது இயேசுவின் பார்வைக்கு முற்றிலும் முரணானது. இயேசு ஏழைகளுக்கு ''இறையாட்சி உரியது'' என மொழிகின்றார். கடவுள் தாம் படைத்த மக்களை ஏழை செல்வர் என்றோ தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்றோ வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் முன்னிலையில் எல்லா மனிதருமே மாண்புடையவர்கள்தாம். குறிப்பாக, இவ்வுலகம் யாரை இகழ்வாகக் கருதுகிறதோ அவர்களைக் கடவுள் தனிப் பாசத்தோடு அரவணைக்கிறார். கடவுளின் பார்வை நமதாக வேண்டும். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே மாற்றிய இயேசு நமக்கு விடுக்கும் சவாலை நாம் ஏற்போமா?

மன்றாட்டு:
இறைவா, அனைவரையும் அரவணைக்கும் உம் அன்பை நாங்கள் உணர்ந்து எங்கள் வாழ்வில் வெளிப்படுத்த அருள்தாரும்.