பொதுக்காலம் - 25 ஆம் வாரம்

செவ்வாய் செப்டம்பர் , 25.09.2012


முதல் வாசகம்



நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 21: 1-6,10-13

மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப் போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார். மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் - இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள். திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார். ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்து விடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும். பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை. ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும்போது அவர் மேலும் அறிவுடையவராவார். நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்து விடுகிறார். ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




பதிலுரைப் பாடல்


திபா 119: 1,27. 30,34. 35,44 (பல்லவி: 35ய)

பல்லவி: ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி

28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 11: 28 -அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை. ``உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்'' என்று அவருக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்'' (லூக்கா 8:21)

இயேசு தம் அன்னையாகிய மரியாவை மதிப்புக் குறைவாகப் பேசியதாகச் சிலர் குறைகூறுவதுண்டு. அவ்வாறு குறைகூறுவோர் மரியாவுக்கு உயர்ந்த மதிப்புக் கொடுக்கவேண்டியதில்லை எனவும் வாதாடுவர். ஆனால் உண்மை என்ன? இயேசு தம் தாய் மரியாவை உயர்ந்தவர் எனப் போற்றுவதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் காட்டுகிறார். ஒன்று, மரியா உண்மையிலேயே தம்மை ஈன்றெடுத்த தாய் என்பது. ஆனால் அதைவிடவும் முக்கிய காரணம் ஒன்றுண்டு. அதுதான் மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட்டது (காண்க: லூக்கா 1:38). ஆக, ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்'' என்று இயேசு கூறிய சொற்கள் இயேசுவின் சீடர் அனைவருமே அவருடைய குடும்பத்தின் உறுப்பினர் என உறுதிப்படுத்துகிறது. இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அந்த வார்த்தையை வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்தால் இயேசு உண்மையிலேயே நம் உடன்பிறப்பாக இருக்கிறார் என்னும் உண்மையை நாம் உணர்ந்திடுவோம். ''சொல்லுதல் யார்க்கும் எளிய: அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்'' (குறள் 664) என்னும் வள்ளுவர் கூற்றும் இந்த உண்மையை உணர்த்துகிறது. -- இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் இயேசுவைப் போல மாற வேண்டும். அவர் கடவுளின் ''வார்த்தை'' (காண்க: யோவான் 1:1): அந்த வார்த்தை ''மனிதர் ஆனார்'' (யோவான் 1:14). இவ்வாறு மனிதர் ஆன வார்த்தையைப் போல நாமும் இறைவார்த்தையைச் செயல்படுத்துவதன் வழியாக நிறைவுள்ள மனிதராக மாறிட அழைக்கப்படுகிறோம். ''இறைவா, நான் எப்போதும் போதிக்க உம் துணை எனக்குத் தேவை: தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளை நான் பயன்படுத்த வேண்டும்'' என்று அசிசி நகர் தூய பிரான்சிஸ் கூறிய அருங்கூற்றினை நாம் இவண் நினைவுகூரலாம். இயேசுவின் வாழ்வே அவர் நமக்கு வழங்கும் தலைசிறந்த போதனை.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்து உமக்குச் சான்றாகிட அருள்தாரும்.