பொதுக்காலம் - 25 ஆம் வாரம்

சனி செப்டம்பர் , 29.09.2012


தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா


முதல் வாசகம்



இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி




அல்லது


திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12ய

விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 138: 1-2ய. 2b-3. 4-5 (பல்லவி: 1உ)

பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2b உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திபா 103: 21 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''நத்தனியேல் இயேசுவைப் பார்த்து, 'ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின்; அரசர்' என்றார். அதற்கு இயேசு, 'உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக்; காண்பீர்' என்றார்'' (யோவான் 1:49-50)

பிலிப்பு என்பவர் வழியாக நத்தனியேல் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிறார். இயேசுவிடம் சென்று அவரைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்புகிறார் நத்தனியேல். அப்போது இயேசு நத்தனியேலின் திறந்த உள்ளத்தைக் கண்டுகொள்கிறார். ''இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று இயேசு நத்தனியேலைக் குறித்துக் கூறுகிறார் (காண்க: யோவா 1:47). தம்மைப் பற்றி இயேசு எவ்வாறு அறிந்தார் என்பது நத்தனியேலுக்குப் புரியவில்லை. ஆனால் இயேசுவின் சொற்களைக் கேட்ட அவர் இயேசுவிடம் அதிசயமான ஒரு சக்தி துலங்குவதைக் கண்டுகொள்கிறார். மிகுந்த வியப்புடன் அவர் இயேசுவைப் பார்த்து, அவரை ''ரபி'' என்றும், ''இறைமகன்'' என்றும், ''அரசர்'' என்றும் அறிக்கையிடுகிறார். இங்கே இயேசு யார் என்னும் கேள்விக்கு ஓரளவு பதில் தரப்படுகிறது. யோவான் நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசு ''கடவுளின் வார்த்தை'' என அழைக்கப்படுகிறார் (காண்க: யோவா 1:1-14). தொடர்ந்து இயேசுவைப் பற்றிய உண்மைகளைப் படிப்படியாக அந்த நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசு வழியாகக் கடவுள் செயல்படுகிறார் என்பதை நத்தனியேல் உணர்கின்றார். இயேசுவும் நத்தனியேலின் திறந்த உள்ளத்தைக் காண்கிறார். எனவே, அவரைப் பாhத்து, ''உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்?'' என்று கேட்டுவிட்டு ''இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்'' எனவும் வாக்களிக்கிறார் (யோவா 1:50). -- இயேசுவுக்கும் அவரை அனுப்பிய தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற உறவு ஆழமானது. ஏனென்றால் இயேசு ''கடவுளின் மகன்''. இந்த உண்மையை நத்தனியேல் அறிக்கையிட்டார். இயேசு அதை இன்னொரு உருவகம் வழியாக விளக்குகிறார். அதாவது, ''கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்'' (யோவா 1:51). இந்த உருவகத்தின் பொருளை நாம் அறிய வேண்டும் என்றால் பழைய ஏற்பாட்டைப் புரட்ட வேண்டும். அங்கே யாக்கோபு கண்ட கனவு விவரிக்கப்படுகிறது. நிலத்தில் ஊற்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர் (காண்க: தொநூ 27:12). யாக்கோபு அந்த இடத்தில் கடவுளின் உடனிருப்பை உணர்ந்தார். இயேசுவும் தம்மை ''மானிடமகனாக'' அறிமுகப்படுத்தி, கடவுளின் தூதர்கள் அவர்மீது ஏறுவதும் இறங்குவதுமாய் இருப்பார்கள் எனக் கூறும்போது, அவருக்கும் இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற நெருங்கிய உறவை நாம் ஓரளவு புரிந்துகொள்ள இயலுகிறது. இயேசு கடவுளோடு ஒன்றித்திருப்பதோடு ''கடவுளின் மகனாகவும்'' இருக்கின்றார். எனவே, அவரைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டுகொள்ள அருள்தாரும்.