பொதுக்காலம் - 28 ஆம் வாரம்

புதன் அக்டோபர் , 17.10.2012


அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி ஆயர் - மறைச்சாட்சி நினைவு


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17 - 4: 1

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப் போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணிய வைக்கவும் வல்லவர். ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யாக் 1: 12 - அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 12:24)

மண்ணில் விழுந்து மடிந்து அதன் வழியாக மிகுந்த பலன் தருகின்ற கோதுமை பற்றிய குறிப்பு கிரேக்க சமய சிந்தனையிலும் காணக்கிடக்கிறது. தூய பவுல் பயன்படுத்துகின்ற ஓர் உவமையும் இவண் கருதத் தக்கது. ''நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது...அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்றெழுகிறது'' (1 கொரி 15:36,42) என்னும் பவுலின் கூற்றில் இவ்வுலகு சார்ந்தது மறைந்து, மறுவுலகு சார்ந்தது தோன்றும் என்னும் உண்மை வெளிப்படுகிறது. இம்மண்ணுலகு சார்ந்த நம் உயிர் ஒருநாள் மறைந்துபோகும்; ஆனால் ஒருநாளும் அழியாத வாழ்வு நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் உலகு சார்ந்த உயிரை விடாது பிடித்துக்கொள்ள நினைக்காமல், நிலைவாழ்வின் பொருட்டு அதை விட்டுவிடத் தயங்கலாகாது என இயேசு கற்பிக்கிறார் (யோவா 12:25). -- கிறிஸ்தவ மரபில் ஆழ வேரூயஅp;ன்றிய உண்மை இது: ''தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' (மாற் 8:35). இவ்வாறு இயேசு கற்பித்த உண்மையை மத்தேயு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்களும் குறித்துள்ளனர் (காண்க: மத் 16:25; லூக் 9: 24; மேலும், மத் 10:39; லூக் 17:33). இயேசு வழங்குகின்ற இப்போதனை நமக்கு ஒரு முரண்பாடாகப் படலாம். ஆனால் அவர் இரண்டு வேறுபட்ட நிலைகள் பற்றிப் பேசுகிறார். முதல் நிலை உலகு சார்ந்தது; இரண்டாம் நிலை விண்ணகம் சார்ந்தது. கடவுள் நமக்கு வழங்கியுள்ள உயிரைப் பேணி, பாதுகாப்பது நம் பொறுப்பு; இயல்பாகவே நாம் நம் உயிரைக் காத்திட முனைகிறோம். இவ்வாறு செய்யும்போது அதற்கு நேர் எதிரான விளைவுதான் ஏற்படுகிறது என இயேசு கூறுகிறார். இதற்கு மாறாக, யார் தம் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதை ''இழப்பதற்கும்'' தயங்காதிருக்கிறார்களோ அவர்கள் உண்மையிலேயே வாழ்வின் பொருளைக் கண்டுகொள்கிறார்கள். இது நம் அறிவுக்கு முற்றிலும் எட்டாத ஓர் உண்மையாகவே இருக்கிறது. ஆனால் இயேசுவின் சீடராக வாழ விரும்புவோர் இயேசுவின் வாழ்விலிருந்து இந்த உண்மையின் பொருளைக் கற்றுக் கொள்கிறார்கள். இயேசு எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்கே அவர் தம் உயிரைக் கையளிப்பார். அவ்வாறு அவர் தம் உயிரை ''இழக்கும்'' போது நமக்கு அவர் ''வாழ்வு தருகிறார்''. இயேசுவின் சீடரும் அவர் காட்டிய வழியில் நடந்து நிலைவாழ்வைப் பெற்றிட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு:
இறைவா, நிலை வாழ்வைப் பெற்றிட அனைத்தையும் இழக்கவும் நாங்கள் முன்வர அருள்தாரும்.