பொதுக்காலம் - 29 ஆம் வாரம்

புதன் அக்டோபர் , 24.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-12

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப் பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன். கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


எசா 12: 2-3. 4bஉன. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பளிக்கும் ஊற்றிலிருந்து அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்?' என்று கேட்டார்'' (லூக்கா 12:42)

இயேசு கூறிய உவமைகள் மக்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன. சில வேளைகளில் இயேசு தம் சீடர்களுக்கு நேரடியாகப் பொருந்தும் விதத்தில் உவமைகள் சொன்னார். லூக்கா பதிவுசெய்துள்ள ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றிய உவமை இத்தகைய ஒன்றாகும். பன்னிரு சீடர்களுக்கும் இயேசு தனிப்பட்ட விதத்தில் பயிற்சி அளித்தார். அவர்கள் கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் ஆதலால் அவர்களை இயேசுவின் போதனைகளைக் கருத்தாய் உள்வாங்கி, பொறுப்போடு மக்களுக்கு அளிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். தம் சீடர்கள் ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' போல நடக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். இயேசுவே தலைவர். அவர் வீட்டுப் பொறுப்பாளரிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைக்கிறார். அந்த வீடு கடவுளின் இல்லமாகிய திருச்சபை. அது கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்களை உள்ளடக்கிய ஒரு குடும்பம் போன்றது. அக்குடும்பத்தை நன்முறையில் பராமரித்துக் காக்கும் பொறுப்பு சீடர்களிடம் கொடுக்கப்பட்டது. -- சீடர்களின் பொறுப்பு என்ன? அவர்கள் கடவுளின் குடும்பத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு ''வேளாவேளை உணவளிக்க'' வேண்டும். அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். சுய நலப்போக்கில் செல்லாமல் பிறருக்கு நன்மை செய்வதில் ஈடுபட வேண்டும். இயேசு வழங்கிய இந்த அறிவுரை இன்றைய திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் மிகவே பொருந்தும். திருச்சபையில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்குத் தேவையான ஆன்ம உணவு வழங்கப்பட வேண்டும். தலைவர்கள் திருச்சபை உறுப்பினரைக் கொடுமைப்படுத்தலாகாது. மனம்போன போக்கில் சென்று, தங்களுடைய வசதியைக் கவனிப்பதிலேயே காலத்தைச் செலவிடலாகாது (காண்க: லூக் 12:45-46). இயேசு தம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தெரிந்துகொண்ட மனிதரிடம் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். எனவேதான், ''மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்'' என இயேசு கூறினார் (காண்க: லூக் 12:48). நம்மிடம் கொடுக்கப்பட்டது யாது? நாம் நமதெனக் கருதுகின்ற அனைத்துமே நம்மிடம் கடவுள் ஒப்படைத்த கொடையே. ஆக, நாம் பெற்றுக்கொண்ட கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட அழைக்கப்படுகிறோம். ''நம்பிக்கைக்கு உரிய வீட்டுப் பொறுப்பாளர்'' என நம்மைத் தேர்ந்துகொண்ட ஆண்டவர் நம்மிடமிருந்து உளமார்ந்த ஒத்துழைப்பையும் பதில்மொழியையும் எதிர்பார்க்கின்றார்.

மன்றாட்டு:
இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற கொடைகளைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.