பொதுக்காலம் - 29 ஆம் வாரம்

சனி அக்டோபர் , 27.10.2012


முதல் வாசகம்



திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், `அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. `ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது. மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசைநார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திபா 122: 1-2. 3-4ய. 4b-5 (பல்லவி: 1ய)

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 ``ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்'', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4ய ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி

4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


எசே 33: 11 - அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார். மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்'' (லூக்கா 13:1-2).

குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு பொதுத் தத்துவமாகக் கொண்டிருப்போர் பலர். அதுபோலவே, பாவம் செய்தால் அதற்குத் தண்டனையைக் கடவுள் கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை கொண்டோர் பலரின் கருத்து. நில நடுக்கம், சூறாவளிக் காற்று, நிலச் சரிவு, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற மக்கள் பாவம் செய்ததால் தண்டிக்கப்படுகிறார்களா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். இயேசு வாழ்ந்த காலத்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்தது. பிறவியிலேயே பார்வை இழந்து பிறந்த ஒருவருக்கு இயேசு மீண்டும் பார்வை வழங்கியபோது அவரிடமும் இக்கேள்விதான் கேட்கப்பட்டது. ''ரபி, அவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று கேட்டவர்களுக்கு இயேசு அம்மனிதர் பார்வையற்றவராகப் பிறக்க யார் பாவமும் காரணமாக இருக்கவில்லை என்ற பதிலளித்தார் (காண்க: யோவா 9:1-3). அதே கருத்தை விளக்குகின்ற இன்னொரு நிகழ்ச்சியை லூக்கா பதிவு செய்துள்ளார். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்னும் செய்தியைக் கேட்ட இயேசு, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்ற கலிலேயரை விடப் பாவிகள் எனக் கூறுவது சரியல்ல என்று கற்பிக்கிறார் (காண்க: லூக் 13:1-2). பிலாத்து கலிலேயரைக் கொன்ற நிகழ்ச்சி வேறு எந்த வரலாற்று ஆதாரத்திலும் காணப்படவில்லை. என்றாலும் அவன் உண்மையிலேயே கொடியவன் என்பதற்கு வேறு பல நிகழ்ச்சிகள் ஆதாரமாக உள்ளன. -- பிறருக்குத் துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் பாவம் செய்ததால்தான் அவ்வாறு துன்புறுகின்றனர் என நாம் முடிவு செய்வது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இதனால் பாவத்தின் விளைவாக யாதொரு துன்பமும் ஏற்படாது என நாம் முடிவுசெய்துவிடலாகாது. சில வேளைகளில் நாம் செய்கின்ற தவறான செயல்களின் விளைவாக நமக்கோ பிறருக்கோ துன்பம் ஏற்படுவது இயல்பு. எனவே தவறான நடத்தையை நாம் விலக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வந்தால் அது சரியானதே. ஆனால் பிறருக்கு ஏற்படும் துன்பங்கள் அவர்கள் பாவம் செய்ததின் விளைவே என நாம் முடிவுசெய்வதோ, அந்த முடிவின் அடிப்படையில் அவர்களை இழிவாக நோக்குவதே கிறிஸ்தவ மனப்பான்மைக்கு எதிரான ஒன்று. துன்பம் ஏன் வருகிறது என்பதற்கு நம்மால் முழுமையான பதில் காண்பது இயலாது. ஆனால் குற்றமற்றவராக இருந்த இயேசுவே நமக்காத் துன்பங்களை ஏற்றார் என்பது நமக்கு ஆறுதலாக அமைய வேண்டும். இயேசுவைப் போல நாமும் துன்பங்கள் வழியாக நன்மை நிகழ வழியாக மாறிட வேண்டும். பிறருடைய துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு மாறாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகின்ற மனப்பான்மை நம்மிலிருந்து மறைய வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்களைக் காக்கிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.