பொதுக்காலம் - 34 ஆம் வாரம்

புதன் நவம்பர் , 28.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

சகோதரர் சகோதரிகளே, யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: ``கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 98: 1. 2-3யb. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)

பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.

1 ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


திவெ 2: 10 - அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு, 'என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது' என்றார்'' (லூக்கா 21:17-18)

இயேசுவைப் பின்செல்லும் மனிதர்கள் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். எனவேதான் இயேசு ''என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்'' என்று கூறுவதாக லூக்கா பதிவு செய்துள்ளார் (லூக் 21:17). லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் அதுதான். கிறிஸ்துவைப் பற்றி மக்கள் நடுவே எடுத்துரைத்து, அவர்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்பிட கிறிஸ்தவ போதகர்கள் முயன்றார்கள். அப்போது யூதர் நடுவிலிருந்தும் பிற இனத்தார் நடுவிலிருந்தும் பலத்த எதிர்ப்பு எழுந்ததுண்டு. இது தூய பவுல் பணியாற்றிய இடங்களில் நிகழ்ந்தது என்பதை அவருடைய திருமுகங்களிலிருந்து அறிகிறோம். இயேசு எருசலேம் கோவில் அழிந்தபடும் என அறிவித்தார். தொடர்ந்து உலக இறுதியில் போர்களும் குழப்பங்களும் ஏற்படும் எனவும் முன்னறிவித்தார். இந்த இறுதிக் காலம் என்பது விரைவில் வரும் என தொடக்க காலத் திருச்சபை எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இறுதிக் காலம் ஒருவிதத்தில் ஏற்கெனவே வந்துவிட்டது. அதாவது, இயேசுவின் சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் இந்த இறுதிக் காலத்தின் தொடக்கமாக அமைந்தன. கடவுளின் ஆட்சி இவ்வுலகில் தொடங்கியுள்ளதை இயேசுவின் வாழ்வு முன்னறிவித்தது. இருப்பினும் அந்த இறுதிக் காலத்தில் வாழ்கின்ற நாம் இறையாட்சியின் நிறைவை இன்னும் காணவில்லை. -- இறையாட்சியின் நிறைவு எப்போது எங்கே நிகழும் என்பதையும் நாமறியோம். ஆனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் நாம் இயேசுவிடத்தில் அசையாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். ''உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது'' (லூக் 21:18) என இயேசு கூறுவது மிகைக் கூற்றாகப் படலாம். ஆனால் அதன் பொருள் நமக்குத் தெளிவாகவே உள்ளது. அதாவது, இயேசுவைத் தங்கள் மீட்பராக ஏற்று, அவரில் அசையாத நம்பிக்கை கொள்கின்ற மனிதர்கள் எந்த ஆபத்து வந்தாலும் அஞ்சவேண்டியதில்லை. கடவுளின் வல்லமை அவர்களைத் தாங்கிக் கொள்ளும். இதனால் நமக்குத் துன்பங்களே வராது என இயேசு கூறவில்லை. மாறாக, துன்பங்கள் வந்தாலும் கடவுள் நம்மைக் கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. இயேசுவின் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இருந்தது. ஏன், கேவலமான சிலுவைச் சாவுக்கு அவர் உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றினார். சாவின் மீது வெற்றி கொண்டார். அந்த வெற்றி நமக்கும் உண்டு என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற வாக்குறுதி.

மன்றாட்டு:
இறைவா, துன்பங்கள் நடுவிலும் உம்மைப் பற்றிக் கொள்ள அருள்தாரும்.