பொதுக்காலம் - 34 ஆம் வாரம்

வியாழன் நவம்பர் , 29.11.2012


முதல் வாசகம்



திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9

சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: ``வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.'' பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: ``பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது.'' இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: ``அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.'' மீண்டும் அந்த மக்கள், ``அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது'' என்றார்கள். அந்த வானதூதர் என்னிடம், `` `ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது'' என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: திவெ 19: 9ய)

பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 21: 28 - அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''மண்ணுலகில் மக்களினங்கள் கடல் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்'' (லூக்கா 21:25)

மானிட மகன் மீண்டும் வருவார் என்னும் செய்தியை மக்களுக்கு இயேசு அறிவித்தார். அந்த இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பதை நாமறியோம். ஆனால் அது கட்டாயம் நிகழும் என்பது பற்றி இயேசு நமக்கு உறுதியளித்திருக்கிறார். இறுதிக் காலம் பற்றி இயேசு கூறிய கருத்துக்களைச் சிலர் திரித்துப் பொருளுரைக்கிறார்கள். அதாவது, உலகமும் உலகத்திலுள்ள அனைத்தும் அழிந்துபோகின்ற விதத்தில் வானத்திலிருந்து நெருப்பு மழை பொழியும் என்றும், சூரியனும் சந்திரனும் இருண்டுபோய், கோள்கள் இடம் பெயர்ந்து, அதனால் ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக மனித இனமே நிலைகுலைந்துபோகும் என்றும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் இயேசு அறிவித்த செய்திக்கு நேர்மாறாகப் போகிறது என்பதை நாம் உணர வேண்டும். இறுதிக் காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற செய்தியில் இரண்டு முக்கியமான கருத்துக்களை நாம் மறந்துவிடலாகாது. முதலாவது, இறுதிக் காலம் பற்றி இயேசு கூறுவது உருவக மொழியில் அமைந்த கூற்றே தவிர அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேறப்போகும் முன்னறிவிப்பு அல்ல. இதை ''இறுதிக்கால மொழி வழக்கு'' (யிழஉயடலிவiஉ டயபெரயபந) என அறிஞர் கூறுவர். இம்மொழி வழக்குப்படி, பிரமாண்டமான அளவில் நிகழப் போவதாகக் கூறப்படுகின்ற காரியங்கள் மனிதரின் அன்றாட வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், அவர்களது உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளையும் பிரதிபலிப்பனவாகும். எனவே, இயேசு, இயற்கையில் நிகழ்கின்ற சேதங்களைக் கண்டு ''மக்கள் குழப்பம் அடைவார்கள்'' என்கிறார் (லூக் 21:25). இந்தக் குழப்பம் ஏற்படும்போது நாம் மன உறுதியோடு நிலைத்து நிற்க வேண்டும். இதுவே இறுதிக்காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற இரண்டாவது கருத்து. -- நாம் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார்: ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்ப நெருங்கி வருகின்றது'' (லூக் 21:28). நமக்கு மீட்புக் கொணர்கின்ற கடவுள் நம்மைத் தண்டிப்பதற்கோ நமக்குத் தீங்கிழைப்பதற்கோ வருகின்ற கொடூரமான நீதிபதி அல்ல; மாறாக, நம்மேல் அன்புகொண்டு, நம் பாவங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற நம் தந்தை. இந்த உண்மையைக் குறிக்கும் விதத்தில் இயேசு ''நம் மீட்பு நெருங்கி வருகின்றது'' என நமக்கு ஊக்கமும் ஆறுதலும் அளிக்கின்றார். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் நம் மீட்புக்கு அடித்தளமாக உள்ளன. நாம் ஏற்கெனவே மீட்பில் பங்கேற்கின்றோம். நம் மீட்பின் நிறைவு இறுதிக்காலத்தில் நிகழும். இது நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொணர்கின்ற நல்ல செய்தி. இந்த நிலை வாழ்வை நாம் பெற வேண்டும் என்றால் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவர் இயேசு வழியாக நமக்கு வழங்குகின்ற மீட்பினை நாம் நன்றியோடு ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்வின் நிறைவு நீரே என உணர்ந்து உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.