திருவருகைக்காலம் - 2ஆம் வாரம்

செவ்வாய் திசம்பர் , 11. 12 .2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

�ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். �உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; �எதை நான் உரக்கக் கூற வேண்டும்?'' என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10ய)

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்துச் சீடர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: 'நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'...'' (மத்தேயு 18:3)

கடவுளின் பார்வையை நாம் பெற வேண்டும் என்பது இயேசுவின் போதனையின் முக்கிய அம்சம். எனவே கடவுளாட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் இயேசு சாதாரண மனித கண்ணோட்டத்தின்படி நாம் தீர்ப்பிடலாகாது என வலியுறுத்துகிறார். பதவி, அந்தஸ்து, சமூகப் படிநிலை போன்ற மதிப்பீடுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அன்றைய சமூகத்தில் இயேசுவின் போதனை விசித்திரமாகத் தோன்றியிருக்கும். ஏன், இன்றும் கூட, எத்தனையோ மனிதர் பதவி, பணம், சமூக மதிப்பு, அந்தஸ்து போன்ற மதிப்பீடுகளையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைக் காண்கின்றோம். இயேசுவின் பார்வையோ இந்த ''உலகப் பார்வை''யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர் ஒரு சிறு குழந்தையை அழைக்கின்றார். வளர்ந்த, பலம் பொருந்திய மனிதராகச் சீடர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். அங்கே இயேசு புரிந்த இச்செயல் தனிப் பொருள் கொண்டது. சிறு குழந்தைகளுக்கு அன்றைய சமூகத்தில் மதிப்பில்லை. அவர்கள் பெற்றோரையும் பெரியோரையும் சார்ந்து வாழ வேண்டிய நிலை. பிறரிடமிருந்து உதவி பெற்றுத்தான் அவர்கள் தங்கள் தேவையை நிறைவு செய்ய இயலும். -- இச்செயலைத் தொடர்ந்து இயேசு கூறிய சொற்கள் அச்செயலின் பொருளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீடர்கள் ''மனம் திரும்ப'' வேண்டும்; ''சிறு பிள்ளையாக'' மாற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விண்ணரசில், கடவுளின் ஆட்சியில் இடம் உண்டு. மனம் திரும்புதல் என்றால் வாழ்க்கை முறையை வேரோட்டமாக மாற்றியமைத்தல் எனப் பொருள்படும். பயணம் செல்லும் ஒருவர் தான் அதுவரை நடந்துசென்ற பாதை தவறானது என உணர்ந்ததும் உடனேயே திரும்பி, வந்த வழியே மீண்டும் நடந்து சரியான பாதையில் போகிறார் என்பது ''மனம் திரும்புதல்'' ஆகும். முதிர்ச்சியடைந்த மனிதர் எனத் தங்களைக் கருதுவோர் மீண்டும் ஒரு குழந்தைபோல சிறிய உருவினராய் மாறுவது இயலாது. ஆனால் கடவுளையே முற்றிலுமாக நம்பியிருக்கின்ற மனிதராக நாம் மாற முடியும், மாறவும் வேண்டும். இவ்வாறு கடவுளிடத்தில் நாம் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் கடவுளின் ஆட்சியில் நமக்குப் பங்குண்டு என இயேசு வாக்களிக்கிறார்.

மன்றாட்டு:
இறைவா, குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.