திருவருகைக்காலம் - 2ஆம் வாரம்

வியாழன் திசம்பர் , 13. 12 .2012


முதல் வாசகம்



சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 80: 1,2b. 14-15. 17-18 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2b உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 3: 4,6 - அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்'என்று ஒரு குரல் ஒலித்தது'' (மாற்கு 9:7)

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அவரோடு கூட இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பேதுருவின் மாமியார் குணமடைந்தபோதும் (மாற் 1:29-31), தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்றெழுந்தபோதும் (மாற் 5:37), கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் (மாற் 14:33) இயேசுவோடு கூடச் சென்றவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரே. இவர்கள் இயேசு தோற்றம் மாறிய வேளையிலும் அவரோடு இருந்தார்கள். அப்போது இயேசு யார் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வானிலிருந்து வந்த குரல் இயேசுவை அடையாளம் காட்டுகிறது; ''இயேசு கடவுளின் மகன்''. -- இயேசுவின் போதனைக்குச் செவிமடுப்போர் கடவுளின் குரலுக்கே செவிமடுக்கின்றனர் என்னும் உண்மை இங்கே வெளிப்படுகிறது. வானில் தோன்றிய மேகம் கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளம். எனவே, இயேசுவுக்கும் அவர் தந்தை என அழைத்த கடவுளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததை நற்செய்தி சுட்டுகின்றது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் போதனையை நாம் ஏற்று அதற்கேற்ப வாழும்போது அது நம் உள்ளத்தையும் இதயத்தையும் உருமாற்றுவதோடு நம்மைப் புதுப் பிறப்புகளாகவும் மாற்றும். கடவுளின் புத்துயிரைப் பெறும் நாம் அதைப் பிறரோடு பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளங்களில் ஒலிக்கின்ற உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் எப்போதும் செவிசாய்த்திட அருள்தாரும்.