திருவருகைக்காலம் - 3 ஆம் வாரம்

செவ்வாய் திசம்பர் , 18. 12 .2012


முதல் வாசகம்



இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 5-8

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள `தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். `யாவே சித்கேனூ' - அதாவது `ஆண்டவரே நமது நீதி' - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, `எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று எவரும் சொல்லார். மாறாக, `இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை' என்று கூறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 72: 1-2. 12-13. 18-19 (பல்லவி: 7)

பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி

18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப் பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். பல்லவி

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இஸ்ரயேல் குடும்பத்தின் தலைவரே, சீனாய் மலைமீது மோசேக்குத் திருச்சட்டம் ஈந்தவரே, திருக்கரம் நீட்டி எங்களை மீட்க வந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-24

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற்றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, �யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். மரியா ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். �இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''பின்பு இயேசு தம் பெற்றோர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்'' (லூக்கா 2:51)

இயேசு தம் தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். அதாவது, தந்தையின் விருப்பப்படி நடப்பதே இயேசுவின் வாழ்க்கை முறையாக இருந்தது. ஏனெனில் அவர் தந்தையோடு எந்நாளும் இணைந்திருந்தார். இந்த இயேசு தம் பெற்றோராகிய யோசேப்பு, மரியா ஆகிய இருவருக்கும் கூட ''பணிந்திருந்தார்'' என்பதன் பொருள் என்ன? முதன்முதலில் இங்கே நாம் காண்பது இயேசுவின் மனிதப் பண்பு. அவர் கடவுளின் மகனாக இருந்த போதிலும் மனிதருள் ஒருவராக மாறினார்; மனிதப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார். எனவே இயேசு தம் தாய் மரியாவுக்கும், வளர்ப்புத் தந்தை யோசேப்புக்கும் பணிந்திருந்தார். பழைய ஏற்பாட்டு வாழ்க்கை முறை இயேசுவின் வாழ்க்கை முறையாகவும் இருந்தது. பழைய ஏற்பாட்டு ஆன்மிகம் இயேசுவின் ஆன்மிகமாகத் துலங்கியது. பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை இயேசுவும் கடைப்பிடித்தார் (விப 20:12 - ''உன் தந்தையையும் தாயையும் மதித்து நட''). -- பிள்ளைகள் பெற்றோருக்குப் பணிந்திருக்க வேண்டும் என்னும் கட்டளை இரு வேறு விதங்களில் தவறாக விளக்கப்பட்டு வந்துள்ளது. முதலில், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை மேற்கோள் காட்டிச் சிலர் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துகின்ற போக்கு ஆங்காங்கே உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. ஏனென்றால், மனிதர் பெரியவராயினும் சரி, சிறியவராயினும் சரி, அவர்களுக்குக் கடவுளே வழங்குகின்ற மனித மாண்பு உண்டு. அதை யாரும் அழித்துவிடவோ எடுத்துவிடவோ இயலாது. சிறுவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவற்றை யாரும் மீறலாகாது. இரண்டாவது, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் காட்ட வேண்டிய கீழ்ப்படிதல் ஒரு நாளும் கடவுளின் விருப்பத்திற்கு எதிராக அமையலாது. இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், தம் சொந்த விருப்பப்படி நடக்கலாமே என்பது (மத் 4:1-11). இயேசு அச்சோதனைக்கு இடம் கொடுக்கவில்லை. கடவுளுக்கு மட்டுமே நம் உள்ளார்ந்த பணிதலும் கீழ்ப்படிதலும் தெரிவிக்கப்பட வேண்டும். மனிதர் மனிதர் பிற மனிதர்மீது கொண்டிருக்கின்ற அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு எதிராக அயைலாகாது. மாறாக, எல்லா மனிதரும் கடவுளின் விருப்பம் யாதெனக் கண்டு உணர்ந்து அதன்படி நடக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயேசு தம் விண்ணகத் தந்தைக்குப் பணிந்து வாழ்ந்தர். தம் பெற்றோருக்கும் அவர் பணிந்தார். இவ்வாறு இயேசு நமக்கு ஒரு முன்மாதிரிகை தந்துள்ளார்.

மன்றாட்டு:
இறைவா, எம் வாழ்க்கைப் பயணத்தில் எங்களோடு இருந்து வழிநடத்தியருளும்.