திருவருகைக்காலம் - 3ஆம் வாரம்

வெள்ளி திசம்பர் , 21. 12 .2012


முதல் வாசகம்



இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 2: 8-14

தலைவி கூறியது: என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: �விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. இதோ, கார்காலம் கடந்துவிட்டது. மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடிமகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப்புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது. அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.'' பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 33: 2-3. 11-12. 20-21 (பல்லவி: 1ய,3ய காண்க)

பல்லவி: நீதிமான்களே, புதியதொரு பாடல் ஆண்டவர்க்குப் பாடுங்கள்.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். பல்லவி பல்லவி

11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இம்மானுவேலே, சட்டம் இயற்றும் எம் அரசே, இறைவனாம் எம் ஆண்டவரே, எம்மை மீட்க எழுந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில் உள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், �பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''மரியா... 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்... வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்' என்றார்'' (லூக்கா 1:49,52)

மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை. இந்த உண்மையை ஒரு பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்ற ஆகஸ்டு 15 நம் இந்திய நாட்டின் விடுதலை நாள் கூட. மரியாவின் மண்ணக வாழ்வின் இறுதியில் கடவுள் அவரை மகிமைப்படுத்தினார். மரியா விண்ணேற்பு அடைந்தார் என்னும் வெளிப்படையான கூற்று விவிலியத்தில் இல்லையெனினும், மரியா பற்றி விவிலியம் கூறுகின்றவற்றையும் வரலாற்றில் திருச்சபை மரியாவைப் புரிந்துகொண்ட முறையையும் கருதும்போது நாம் மரியாவுக்குக் கடவுள் அளித்த தனிச் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. மரியா தம் வயிற்றில் கடவுளின் மகனாகிய இயேசுவைக் கருத்தாங்கி அவரை உலகின் மீட்பராக நமக்கு அளித்தார். எனவே நாம் மரியாவைக் ''கடவுளின் தாய்'' எனப் போற்றுகிறோம். மரியாவுக்குக் கடவுள் இப்பெரும் சிறப்பை அளித்தது கடவுளின் அருள் பெருக்கின் விளைவே. மரியாவுக்குக் கடவுள் ''அரும்பெரும் செயல்கள்'' செய்தார். கடவுளின் திருவுளத்தை முழுமையாக ஏற்று அதன்படி நடந்த மரியாவைக் கடவுள் உயர்த்தினார். -- மேலும் மரியா திருச்சபைக்கும் அன்னையாக இருக்கின்றார். அதாவது கடவுளின் வார்த்தையை அவர் தம் இதயத்தில் தாங்கி அதையே தம் வாழ்வுக்கு ஒளியாகக் கொண்டார். மரியா கடவுளின் வார்த்தையைத் தம் உதரத்தில் கருவாக ஏற்று அவரை உலகுக்கு அளித்தார். இப்பெரும் சிறப்பில் பங்குபெற்ற மரியா நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார். கடவுளை நம்பி, அவருடைய வழியில் நடப்போருக்கு எத்தகு உயர்நிலை காத்திருக்கிறது என மரியா நமக்குத் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருக்கிறார். மரியா தம் உறவினராகிய எலிசபெத்தைச் சந்தித்தபோது பாடிய மகிழ்ச்சிக் கீதத்தில் கடவுள் ''தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்'' எனக் கூறியது நமக்கும் பொருந்தும். கடவுளின் முன்னிலையில் நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்தால் கடவுள் தம் அரசில் நம்மை ஏற்று நமக்கு மாட்சி அளிப்பார்.

மன்றாட்டு:
இறைவா, உம்மைத் தாழ்ச்சியோடு அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.