திருவருகைக்காலம் - 3 ஆம் வாரம்

சனி திசம்பர் , 21. 12 .2012


முதல் வாசகம்



சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

அந்நாள்களில் சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: �என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.'' அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்


1 சாமு 2: 1. 4-5. 6-7. 8யb (பல்லவி: 1ய)

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: �ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.'' மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை


''மரியா, 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்' என்றார்'' (லூக்கா 1:47-48)

எலிசபெத்தைச் சந்திக்கச் சென்ற மரியா ''பேறுபெற்றவர்'' எனப் போற்றப்பட்டார் (காண்க: லூக் 1:42,45). மரியாவின் வயிற்றில் குழந்தையாக இயேசு இருக்க, எலிசபெத்தின் வயிற்றில் குழந்தையாக இருந்த யோவான் ''மகிழ்ச்சியால் துள்ளினார்'' (காண்க: 1:41,44). இந்நிகழ்ச்சிகளைக் கண்ட மரியாவின் உள்ளம் இறைப் பிரசன்னத்தால் நிறைகின்றது; அவரது இதயத்தில் நன்றியுணர்வு ததும்புகிறது; தம் இதய உணர்வுகளை மரியா இனிமைமிகு பாடலாக வெளிப்படுத்துகிறார்: ''ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது'' எனத் தொடங்குகின்ற மரியாவின் பாடல் எலிசபெத்தின் வாயிலிருந்து புறப்பட்டிருக்கலாம், அல்லது இருவருமே இணைந்து அதைப் பாடியிருக்கலாம். எவ்வாறாயினும் அப்பாடல் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சியொன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றது. அன்னா என்னும் பெண்மணி குழந்தைப் பேறின்றி இருந்தார். அவருக்குக் கடவுளின் அருளால் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு சாமுவேல் என்று பெயர். சாமுவேலின் பிறப்பைக் கொண்டாடிப் பாடிய அன்னா கடவுள் தம் வாழ்வில் புரிந்த அரும் செயலை வியந்து போற்றினார். அவர் பாடிய பாடலின் சில அம்சங்கள் மரியா பாடிய பாடலிலும் உள்ளன (காண்க: 1 சாமு 2:1-10). அதற்கு முற்பட்ட காலத்தில், கடவுள் புரிந்த அரும் செயல்களை வியந்து தெபோரா என்னும் பெண்மணி பாடிய பாடலின் எதிரொலிப்பையும் மரியாவின் பாடலில் காணலாம் (காண்க: நீத 2:2-31). -- கடவுளை நம்புகின்ற மனிதரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் உறுதியான நம்பிக்கை மரியாவின் பாடலில் காணக்கிடக்கிறது. அதுபோல, கடவுளைப் புறக்கணித்து, தம் மனம் போன போக்கில் வாழ்வோர் இவ்வுலகில் அதிகாரமும் செல்வமும் கொண்டிருந்தாலும் தங்கள் நிலையிலிருந்து ஒருநாள் வீழ்ச்சியடைவர் (காண்க: லூக் 1:52-53). மரியாவின் மகிழ்ச்சிப் பாடலுக்கு அடிப்படையாக அமைவது யாது? கடவுளின் பார்வையில் ''அடிமை'' போல் இருந்த மரியா ஏற்கெனவே கடவுளுக்குத் தாம் அடிமை என ஏற்றிருந்தார் (காண்க: லூக் 1:38). கடவுளுக்கு எது விருப்பமோ அதையே தம் வாழ்வில் நிறைவேற்றுவதாகவும் கூறியிருந்தார். எனவே, கடவுளின் திருவுளம் தம் வாழ்வில் நிறைவேறட்டும் என மரியா தம்மை முற்றிலுமாகக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருந்தார் (காண்க: லூக் 1:38). மரியாவின் தாழ்ச்சியைக் கண்ட கடவுள் அவரை மிகவே உயர்;த்தினார். உலக மீட்பராக வந்த மெசியாவின் தாயாகின்ற பேற்றினை அவருக்கு அளித்தார். மரியாவிடம் துலங்கிய தாழ்ச்சி நம் வாழ்விலும் வெளிப்பட வேண்டும். மரியா கடவுளை நம்பி வாழ்ந்தது போல நாமும் கடவுள் நம்பிக்கையில் நிலைத்து நிற்க வேண்டும். உலகம் ஏழைகள் எனக் கருதுவோர் மட்டில் கடவுள் தனி அன்பு கொண்டிருப்பது போல நாமும் செயல்பட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்ற உமக்கு நாங்கள் எந்நாளும் பணிந்திருக்க அருள்தாரும்.