திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 04-12-2011


ஆயத்தமாகுங்கள்



திருப்பலி முன்னுரை


இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம். இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும், திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம்


இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஆயத்தமாகுங்கள், ஆண்டவர் வருகிறார். தம் மந்தையை அவர் காப்பார் என்று நற்செய்தி அறிவிக்கப்பட்டது. இஸ்ராயேல் மக்களும் ஆயத்தமானார்கள். அடிமை வாழ்விலிருந்து மக்கள் மீட்கப்பட்டார்கள். மகிழ்ச்சியைக் கண்டடைந்தார்கள். பாலஸ்தீனாவில் யூதர்கள் மெசியாவிற்காகக் காத்திருந்தார்கள். ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்னும் அறிவிப்பு திருமுழுக்கு யோவானால் அறிவிக்கப்பட்டது. அன்று ஆண்டவர் வருகை தூய ஆவியால் வல்லமை கொடுக்கும் திருமுழுக்காக வந்திறங்கியதைக் கண்டு கொண்டவர்கள் மீட்கப்பட்டார்கள்.

இறைவாக்க்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

1 "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். 2 எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். 3 குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். 4 பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 5 ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். 9 சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! 10 இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. 11 ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார். "

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 85: 9-14

பல்ல்லவி: "ஆண்டவரே உமது பேரன்பை எங்களுக்கு காட்டியருளும், உமது மீட்பையும் எங்களுக்கு தந்தருளும்"

9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.. பல்லவி
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். பல்லவி 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


இரண்டாம் வாசகம்


திருவருகைக் கால இரண்டாவது வாரம் ஆண்டவர் வருகிறார். அவரின் வருகைக்கு ஆயத்தம் தேவை என்பதைத் திருமுழுக்கு யோவானைப் போல, திருச்சபை இன்று ஒரே குரலாக அறிவிக்கிறது. இந்த ஆயத்தத்திற்குப் பாவ மன்னிப்புத் தேவையாகிறது. (மாற்கு 1:4) பாவ மன்னிப்பு அடைய, பாவ அறிக்கையிடப்பட வேண்டும். பாவ அறிக்கையிட பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஆக மனம் மாறி, பாவ மன்னிப்பு அடைந்து, இரண்டாம் வருகையின் போதாவது மீட்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இன்றைய பயணம் செய்யும் திருச்சபை.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்த்திலிருந்து வாசகம் 3:8-14

8 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. 9 ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். 10 ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். 11 இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! 12 கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். 13 அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 14 ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! "ஆண்டவரே உமது பேரன்பை எங்களுக்கு காட்டியருளும், உமது மீட்பையும் எங்களுக்கு தந்தருளும்"! அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


"ஆண்டவரே உமது பேரன்பை எங்களுக்கு காட்டியருளும், உமது மீட்பையும் எங்களுக்கு தந்தருளும்"!

மாற்கு எழுதிய நற்செய்த்தியிலிருந்து வாசகம் 1:1-8

1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்; 2 "இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். 3 பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. 4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். 5 யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். 6 யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 7 அவர் தொடர்ந்து, "என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. 8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" எனப் பறைசாற்றினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


ஆயனே எம் இறைவா! எம் தாய் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை ஆயர;கள் குருக்கள் துறவறத்தார; ஆகிய அனைவரும் பெரிய குருவாகிய இயேசுவின் வழி நடந்து மக்களுக்காக உழைத்திட வேண்டிய ஞானத்தைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் இறை அன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா! வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேளிக்குள் துன்பப்படும் எம் மக்களுக்காவும், மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தேவா! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பின் இறைவா! கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் கொடுமைப்படுத்தப்படும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.