ஞாயிறு திருப்பலி - தவக்காலம் முதல் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 26-02-2012


மனமாற்றம்: குற்றமற்ற மனசான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதி

பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்: 
அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்:


திருப்பலி முன்னுரை


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று தவக்காலம் முதலாம் ஞாயிறு. நமக்காக உண்ணா நோன்பிருந்த நம் ஆண்டவரின் சந்நிதானத்தில் திருப்பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம். ''தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்'' பாலைநிலம் என்பது சோதனை ஏற்படுகின்ற இடம் என்றும், கடவுளைச் சந்தித்து அனுபவம் பெறுகின்ற இடம் என்றும் இரு பொருள் கொண்ட உருவகமாக விவிலியத்தில் வருகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றதும் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு இட்டுச்செல்லப்படுகிறார். ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவை அங்கே ஈர்த்து இழுக்கின்றார்.

தம்மைச் சக்திவாய்ந்த மந்திரவாதியாக எண்ணும்படி (கல்லை அப்பமாக்கும் சோதனை) இயேசுவுக்கு சோதனை வருகிறது.

தம் உயிருக்கு ஆபத்துவரும் என்றாலும் கடவுள் தம் வல்லமையைக் காட்டட்டுமே என்னும் மூடத் துணிச்சல் கொள்ள அவருக்கு சோதனை வருகிறது (கோவில் உச்சியிலிருந்து கீழே குதிக்கும் சோதனை).

உலக செல்வங்களை நல்வழியிலோ தீயவழியிலோ பெற்றிடலாம் என்னும் சோதனை வருகிறது (அலகையை வணங்குவதற்கான சோதனை).

ஆனால் சோதனையின்போது கடவுளின் உடனிருப்பை இயேசு ஒருகணமேனும் மறக்கவில்லை. நமக்கும் பாலைநிலச் சோதனைகள் வருவதுண்டு. கடவுள் நம்மைவிட்டு அகன்றதுபோன்ற நிலை ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு நம்மைவிட்டு அகன்றுவிடலாகாது. சிலவேளைகளில் நாம் தேடிச் செல்கின்ற பாலைநிலம் கடவுளின் உடனிருப்பை நாம் வேண்டும் என்றே ஒதுக்குகின்ற முயற்சியாக இருக்கக் கூடும். அந்த அனுபவம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்குமே தவிர கடவுளனுபவம் பெற நமக்குத் துணையாகாது. ஆக, உண்மையான பாலைநில அனுபவம் என்பது சோதனை வேளையிலும், துன்பவேளையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் ஆழ்ந்த உணர்வை நாம் பெற்றுக்கொள்ளவும், தொடங்கியிருக்கம் இந்தத் தவக்காலம், இறைவனின் அன்பை நாம் அதிகமாக உணரவும், நம் தவறுகளையும் பாவங்களையும் ஏற்று மனம் வருந்தி மன்னிப்பை அடைந்து புதிய வாழ்வை - புனித வாழ்வை பெறவும் இறை உறவில் - பிறர் உறவில் வளரவும், வாழவும் இறைவன் நமக்கு அருளுகின்ற தனிப்பெரும் கொடையாகும். இந்த நாட்களில் உண்மையான மனமாற்றம் பெறுவோம், என்றுமே இறைத் தந்தையின் விருப்பம் நிறைவேற்றி வாழ்வோம். ஒருபோதும் இறைவனை மறவா நிலை பெற எங்களுக்கு அருள்தாரவேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.


முதல் வாசகம்


முதல் வாசக முன்னுரை: தொடக்க நூல் 9: 8-15
வெள்ளப் பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கை.


தொடக்க நூலிலிருந்து முதலாம் வாசகம். 9: 8-15

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: `இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள், கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது." அப்பொழுது கடவுள், ``எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். மண்ணுலகின்மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திபா 25: 4-5யb. 6-7bஉ. 8-9 (பல்லவி: 10)

பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி



இரண்டாம் வாசகம்


திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகம் (3: 18-22)
இப்போது உங்களை மீட்கும் திருழுழுக்கிற்கு இந்த நீர் முன்னடையாளமாயிருக்கிறது.


திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-22

அன்பிற்குரியவர்களே, கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். நோவா பேழையைச் செய்துகொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக்கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிலர், அதாவது எட்டுப் பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பு அளிக்கிறது. அவர் வானதூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


நற்செய்தி மாற்கு 1:12-15
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்




மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (மாற்கு 1:12-15)

உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்: அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்: அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர். யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் " என்று அவர் கூறினார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புமிக்க இறைவா உமது திருச்சபைக்கு நீர் அளித்திருக்கின்ற இந்தத் தவக்காலத்திற்காக உம்மை நன்றியுடன் புகழ்கின்றோம். உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்

நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும்,வறுமையினாலும் பாதிக்கப்பட்டு துன்புறுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தொலைத் தொடர்பு ஊடகங்கள், தவறான விளம்பரங்கள், இவற்றின் மத்தியில் எங்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் பாவச் சோதனைகளுக்கு உடன்படாமல் உமது வார்த்தையின் வழிநடந்து வெற்றி வாழ்வைக் கண்டிட அருள் பணிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும் ,செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாக்கின்றவரும், எம் உயிரை என்றும் காத்திடுகின்றவரும், நாம் போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் எம்மைக் காத்தருள்பவருமான தந்தையே! அவதியுற்று அல்லலுறும் எம் தமிழ் மக்கள்மீது மனமிரங்கி நாங்கள் ஏங்கித் தவிக்கின்ற முழுமையான விடுதலை வாழ்வை எங்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.