உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு (இறை இரக்க ஞாயிறு)

இரண்டாம் ஆண்டு 15-04-2012


நம்பவும், வாழ்வு பெறவும் !

 இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.

/>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே! சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதரியரே!

இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு. நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன” என்று முடிகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உயிர்ப்பு என்பது ஒரு சவால், ஓர் அறைகூவல். அதை நம்புவதற்கு இறைவனின் சிறப்பான ஆசி தேவை. இயேசு தோமாவின் நம்பிக்கை இன்மையைக் கடிந்துகொண்டார். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்று மொழிந்தார். இயேசு சாவையும், இருளின் ஆற்றல்களையும் வென்று உயிர்த்துவிட்டார் என்பதை நம்புவதற்கு அவரது சீடர்கள் அனைவருமே பெரிதும் தயங்கினர் என்பதை அறியும்போது, நாம் வியப்படையலாம். ஆனால், நாமும் அப்படித்தானே! நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள், ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கிறது. அந்த அழைப்பை ஏற்போம். உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும், உயிர்ப்பின் ஒளியில் வாழ்ந்திடவும் வரம்வேண்டி பெருமகிழ்ச்சியுடன் இத் திருப்பலில் பங்கு பெறுவோம்.

முதல் வாசகம்




திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம் (தி ப 4:32-35)

அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்: அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 118: 2-4 16-18 22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

பல்லவி
2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி
3 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! பல்லவி
4 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி
16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி
17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; பல்லவி
18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! பல்லவி
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி
24 ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி


இரண்டாம் வாசகம்




யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம் (1யோவான் 5:1-6)

அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும்' உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.




நற்செய்தி வாசகம்




நற்செய்திக்கு முன் வசனம்
'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 20:19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் ' என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார். இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

வாழ்வின் ஊற்றாகிய இறைவா,
உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு விழாவை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையில் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கவும் திருச்சபையின் விசுவாச வாழ்வில் புத்துயிர் அளிக்கும் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

1. வாழ்வின் நாயகனே இறைவா!
நீர் சாவினை வென்று, பாவத்தை அழித்து, இருளை அகற்றி வெற்றி வீரராய் உயிர்த்தது போல, நாங்களும் எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளில் வெற்றி பெற்று உயிர்ப்பின் மக்களாய் வாழ, உம் வழியில் வெற்றி நடை போடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வல்லமை மிகுந்தவராம் இறைவா,
இயற்கைச் சீற்றங்களாலும், உடல்நல பாதிப்புகளாலும், மன வேதனைகளாலும், மற்ற வாழ்க்கைப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுத் துன்புறும் அனைவருக்கும் புதுவாழ்வு வழங்க வேண்டுமென்று பணிவன்புடன் உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் மீட்பரே!
உம்முடைய உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும் என் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறைமக்கள் அனைவரும் உம்முடைய உயிர்ப்பின் ஒளியைப் பெற்று, திருச்சபையின் உண்மையான உறுப்பினர்களாக வாழத் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



-->