உயிர்ப்புக் காலம் ஆறாம் ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 13-05-2012


சிறந்த அன்பு

என் அன்பில் நிலைத்திருங்கள்''

/>


திருப்பலி முன்னுரை


இறைவனின் அன்பர்களே,

இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

நாம் இறைவனின் அன்பில் நிலைத்திருக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு வழங்கிய அன்புக் கட்டளையைச் சிலர் ஒரு சுமையாகப் பார்ப்பார்கள். ஆனால் அது நம்மீது சுமத்தப்பட்ட ஒரு பளு அல்ல. இயேசு தருகின்ற அன்புக் கட்டளை உண்மையிலேயே அவர் நமக்குத் தருகின்ற ஒரு ''கொடை''. இயேசுவுக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற அன்பை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். அந்த அன்பை நன்றியோடு ஏற்று, நம் வாழ்வில் நாம் ஆழ உணரும்போது, கடவுள் தம் சாயலாக உருவாக்கிய மனிதரை அன்புசெய்வது போல நாமும் அன்பு செய்திட முன்வருவோம். ஆகவே இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பதுபோல, இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் இணைந்திருந்து, ஒருவர் மற்ற வரை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம்: (தி ப 10:25-26,34-35,44-48)

அக்காலத்தில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.பேதுரு, ;எழுந்திடும்: நானும் ஒரு மனிதன்தான் ; என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதரு பேசத் தொடங்கி, ;கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்: ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, ;நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? ; என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 98: 1-4

பல்லவி: பிற இனத்தார்முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்!

பல்லவி
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். பல்லவி
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


இரண்டாம் வாசகம்



1யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம்: (1யோவான் 4:7-10 )

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

''இயேசு சீடர்களை நோக்கி, 'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்றார்'' (யோவான் 15:9)

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: (யோவான் 15:9-17)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். ;நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்: ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்பே உருவான இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

அன்பின் நிறைவே இறைவா,

உமது அன்பை வெளிப்படுத்த, இந்த உலகில் தோன்றிய உம் திருமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, அவர் வழியாக உம்மை அன்பு செய்யும் வரத்தை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் பிறப்பிடமே இறைவா,

உலகில் அன்பின்மையால் உருவாகியுள்ள அனைத்து தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களிடையே வளர்ச்சி காணவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கவும் உதவ வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

உலகில் தீய குணங்களாலும், தீயப் பழக்கங்களாலும், நோய்களாலும், மன அமைதியின்றி வாழ்வோர் அனைவருக்கும் உமது அன்பினால் ஆறுதல் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு தந்தையே இறைவா,

எங்கள் பங்கு சமூகத்தில் அன்பும் ஒற்றுமையும் பெருகவும், அன்பு செயல்கள் வளரவும் எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, உமது அன்பில் நிலைத்திருக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மைத் தாழ் மையுடன் மன்றாடுகிறோம்.



-->