பரிசுத்த தம திருத்துவம் பெருவிழா (மூவொரு இறைவன் பெருவிழா)
இரண்டாம் ஆண்டு 03-06-2012
ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்
/>
திருப்பலி முன்னுரை
நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே, சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதிரியரே!
மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு
திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின்
வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன்,
தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழவும்,
இத்தினத்தைக் கொண்டாடும் நாமனைவரும் நம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும்
மனநிலையை உருவாக்கி இறைவனை மகிமைப்படுத்தும் சக்தியை இறைவனிடம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இணைச்சட்ட நூலிலிருந்து முதலாம் வாசகம். (இச:4:32-34,39-40
மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ?
அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த
மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல,
சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு
நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர
வேறு எவரும் இலர் " என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும்
கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும்,
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 33: 4-6 9, 18-20 ,22
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்!
பல்லவி
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
பல்லவி
அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாம் வாசகம் (உரோமை 8:14-17)
சகோதரர் சகோதரிகளே! கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு
உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை: மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள்.
அதனால் நாம், "அப்பா, தந்தையே " என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின்
பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து
உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்: அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம்
வல்லவருமான கடவுள் தந்தை, மகன், தூயஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா
! அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்
நற்செய்திக்கு முன் வசனம்
ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்!
புனித. மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: (மத். 28:16-20)
அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.
அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும்
அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: தந்தை,
மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் " என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இறைமக்களின் வேண்டல்கள்:
நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற,
நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
அப்பா, தந்தையே இறைவா,
உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும்,
மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
விண்ணக தந்தையே இறைவா,
இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும்,
உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதி யிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நானே ஆண்டவர்! கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது என்ற உன்னத வாக்குறுதியை எமக்களித்த தந்தையே!
இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும் கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை
பெறத்தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், இயற்கை,
செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
போராட அழைப்பவராம் இறைவா,
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும்,
மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீதியை நிலைநாட்டும் இறைவா,
இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து
தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆறுதலின் ஆண்டவரே!
இலங்கை நாட்டில் பல்வேறு விதமாக அல்லலுறும் எமது தமிழ் மக்களைமீது இரக்கமாயிரும்.
அவர்கள் படும் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்திடவும்,
நிம்மதியான வாழ்வை அவர்களுக்கு அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
வாழ்வளிப்பவராம் இறைவா,
எம்முள் ஒற்றுமையை வளர்த்து, ஒன்றிணைந்து வாழும் மனநிலையை
உருவாக்கி உம்மை மகிமைப்படுத்தும் சக்தியை எமக்குத் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் ஊற்றாம் இறைவா,
இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள்,
சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்பு தந்தையே இறைவா,
உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும்
ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|