பொதுக்காலம் 14 வது - ஞாயிறு -

இரண்டாம் ஆண்டு 08-07-2012


``வாழ்கை அனுபவங்கள் பல''

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்./>


திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே அனைவருக்கும் இறைவனின் நாளின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் உரித்தாக்கிகொள்கிறேன். ஜீலை மாதத்தை இறைவன் பிரசன்னத்தில் நாம் ஒரே சமூகமாக துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாம் தேடிவந்திருக்கும் நற்கருணை இயேசு மகான் இம் மாதம் முழுவதும் நிறைவோடு நலமோடு நிகழ்வுளோடு நம் பாதை அமைய நம்மை வழிநடத்தி ஆசீர் அருள்வாராக.

பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

அன்புக்குரியவர்களே, ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர். அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று. இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம். நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம். ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகின்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம். இறைவனிடமும் பிறரிடமும் சரியான நம்பிக்கை கொண்டு வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்



இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5

அந்நாள்களில் ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், ``மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்'' என்றார். ``வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், `தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: திபா 123: 1. 2. 3-4 (பல்லவி: 2)

பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.

பல்லவி

1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பல்லவி

2 பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். பல்லவி

3 எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்; அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம். 4 இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். பல்லவி



இரண்டாம் வாசகம்



திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 7-10

சகோதரர் சகோதரிகளே, எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், ``என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'' என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா. (லூக் 4: 18-19)

நற்செய்தி வாசகம்



நற்செய்திக்கு முன் வசனம்

சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

என்றும் வாழும் இறைவா,

உலகெங்கும் விரிந்து பரவி நிற்கும் உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இறையாட்சி நெறியில் உறுதிபடுத்தி வளரச்செய்ய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நலம் அளிப்பவராம் இறைவா,

பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும், தங்களிடம் மிகுதியாக இருப்பதைப் பிறரோடு பகிர்ந்து வாழும் நல்ல உள்ளத்தை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அளிப்பவராம் இறைவா,

பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உமது இரக்கத்தால் தங்கள் வாழ்வில் ஆறுதலை சுவைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உற்ற துணைவராம் இறைவா,

நிலையற்ற எங்கள் உடலுக்காக பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் நாங்கள், நிலையான உலகில் வாழத் தேவையான நன்மைகளை செய்து, உமது நீதித் தீர்ப்பின் தண்டனைக்கு ஆளாகாதவாறு உதவிபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு தந்தையே இறைவா,

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



-->