பொதுக்காலம் 22 வது - ஞாயிறு
இரண்டாம் ஆண்டு 02-09-2012
'இறைவா, மனமுவந்து உம்மை அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.
/>
திருப்பலி முன்னுரை
பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு.
பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
இன்றைய திருவழிபாடு தேவையற்ற மனித மரபுகளில் இருந்து விலகி கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து தூயவர்களாய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது.
மனித உள்ளத்தின் விளைவுகளாகிய கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல்களில்
இருந்து விலகி வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கு தந்த இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளைப் பின்பற்றி வாழுமாறு
ஆண்டவர் நம்மைத் தூண்டுகிறார். உடலின் தூய்மையை விட உள்ளத்தின் தூய்மையையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார்.
நம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் தூய எண்ணம் கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1-2,6-8
இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.
நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 15: 2-3ய. 3bஉ-4யb. 5 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
பல்லவி
2 மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார்.
பல்லவி
3bஉ தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4யb நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்.
பல்லவி
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.
பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-18, 21b-22, 27
சகோதரர் சகோதரிகளே, நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 18 - அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை
அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நற்செய்திக்கு முன் வசனம்
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-8, 14-15, 21-23
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான,
அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே,
தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து
வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள்
ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ``உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர்.
அதற்கு அவர், ``வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
`இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார்.
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ``நான் சொல்வதை அனைவரும்
கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை.
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,
தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும்
தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து கின்றன'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இறைமக்களின் வேண்டல்கள்:
அடுத்தவர்மேல் அக்கறை கொண்ட வாழ்வு இறைநம்பிக்கையின் உரைக்கல். உயிரோடு இருப்பது பெரிதல்ல,
பிறர் உயிரையும் நினைத்து பார்த்து, உயிரோடு இருப்பதுவே சாலச் சிறந்தது. களிமண்ணாய் இருந்த உருவத்திற்கு,
கடவுளின் ஆவி உயிர் கொடுத்தார். அச்சத்தினால் அடைபட்டு இருந்த சீடர்களுக்கு, இயேசுவின் ஆவி உயிர் கொடுத்தது.
பயணம் செய்யும், பலவீனமான திருச்சபைக்கு தூய ஆவியானவர் தொடந்து உயிர் கொடுக்கின்றார்.
நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
“இனிமையான தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்;
இறைவாக்கினர் எலியாவைப்போல் இறைவார்த்தை, நற்கருணை ஆகியவற்றால் வலிமையடைந்து, அனைத்து மக்களுக்கும், ஆறுதலாகவும்,
ஆசீர்வாதமாகவும் இருந்து, மக்களை வழிநடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
“வீரத்தின் விளைநிலமே இறைவா,
உள்ளத்தில் இருந்தே ஊற்றெடுகின்ற நன்மை தீமைகளை பகுத்தாய்ந்து, நன்மை செய்வதில் ஆர்வம் கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
“வரங்களின் வள்ளலாம் இறைவா,
கொலை, விபசாரம், களவு, பேராசை, வஞ்சகம், செருக்கு, காமவெறி போன்ற தீச்செயல் களின் பிடியில் சிக்கித் தவிப்போர்
அனைவரும், உமது அருளால் நன்மைத்தனத்திற்குரிய தூய எண்ணங்களைப் பெற்றுக்கொள்ள உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்பே உருவான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
உம்மைப் போற்றிப் புகழ்வதில் ஆர்வம் காட்டும் நான், எனது வாழ்வில் நிறைந்துள்ள முரண்பாடுகளுக்காக மனம் வருந்துகிறேன்.
மன்னிப்பு வேண்டுகிறேன். இறைவா, என்மீது இரக்கம் கொண்டு, நான் முரண்பாடின்றி வாழ அருள்தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
”தூய்மையின் நிறைவாம் இறைவா,
இயேசுவின் கட்டளைகளுக்கு ஏற்ப மனித மரபுகளிலிருந்து விலகி, உம்மையும் பிறரையும் அன்பு செய்து தூயவர்களாய் வாழும் வரத்தினை எம் பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.
உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்.
அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி,
ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும்
விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும்.
இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|